தொழில்நுட்பம்
ஆப்பிள் அக்டோபர் நிகழ்வில் வெளியாக இருக்கும் சாதனங்கள்
ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது பெரும் நிகழ்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் எதிர்பார்க்கப்படும் சாதனங்களின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #AppleEvent
ஆப்பிள் நிறுவனம் 2018ம் ஆண்டில் இரண்டாவது முறையாக மிகப்பெரும் நிகழ்வினை அக்டோபர் 30ம் தேதி நடத்த இருக்கிறது. இரண்டாவது விழா நியூ யார்க் நகரின் புரூக்லின் அகாடமியில் நடைபெற இருக்கிறது.
கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ், ஐபோன் XR மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 உள்ளிட்ட மாடல்களை அறிமுகம் செய்தது.
இதைத் தொடர்ந்து ஆப்பிள் ஏற்பாடு செய்திருக்கும் புதிய விழாவின் தீம் “மேக்கிங்” என பெயரிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இவ்விழாவில் ஆப்பிள் நிறுவனம் தொழில் செய்வோருக்கு ஏற்ற புதிய சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.
இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ, மேம்படுத்தப்பட்ட மேக் மினி உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. புதிய சாதனங்கள் வெறும் ஐபோன் மட்டுமின்றி அன்றாட தொழில் செய்வோருக்கு ஏற்ற வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஐபேட் ப்ரோ மாடலில் ஃபேஸ் ஐ.டி. தொழில்நுட்பம், யு.எஸ்.பி. டைப்-சி கனெக்டர் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த சாதனத்துடன் விலை குறைந்த மேக்புக் மற்றும் புதிய மேக் மினி அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் மேக் மினி 2014ம் ஆண்டில் இருந்து அப்டேட் செய்யப்படவில்லை. இத்துடன் வேகமான இன்டெல் பிராசஸர்கள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஐமேக், ஐமேக் ப்ரோ மற்றும் 12-இன்ச் மேக்புக் உள்ளிட்டவை அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.