தொழில்நுட்பம்
ஃபேஸ்புக் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு
ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியை பயன்படுத்தும் மூன்று பேர் அந்நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கலிஃபோர்னியா:
ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியை பயன்படுத்தும் மூன்று பேர் தங்களது அழைப்பு மற்றும் குறுந்தகவல் போன்ற தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்ட விவகாரம் குறித்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் வழக்கில் ஃபேஸ்புக் மீது உரிய நடவடிக்கை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஃபேஸ்புக் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் ஃபேஸ்புக் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் அழைப்பு மற்றும் குறுந்தகவல் விவரங்களை சேகரிப்பதாக ஃபேஸ்புக் பகிரங்கமாக அறிவித்தது.
எனினும் வாடிக்கையாளர்கள் தகவல்கள் அனைத்தும் அவர்களின் சேவையை மேம்படுத்தவே சேகரிக்கப்படுகிறது என்றும் இவை அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன, இவை எவ்வித மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கும் வழங்கப்படவில்லை என ஃபேஸ்புக் கூறியது.
முன்னதாக ஃபேஸ்புக் சேவையை பயன்படுத்தும் சுமார் ஐந்து கோடி பேரின் தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா எனும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டு பூதாகரமாய் வெடித்தது. இதுதொடர்பாக பிரிட்டன் மற்றும் அமெரிக்க பாராளுமன்ற குழு சார்பில் விசாரணை மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.