ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியது சாம்சங்
- இந்த ஆண்டு முதல் காலாண்டில் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களின் உற்பத்தி 2.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
- இண்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் நிறுவனம் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் சாம்சங் நிறுவனம் முன்னிலை வகிப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த வருடத்தின் முதல் காலாண்டில் எந்த கம்பெனி ஸ்மார்ட்போன்கள் அதிகம் விற்பனையானது என்பது குறித்த ஆய்வறிக்கையை இண்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி 23.4 சதவீத மார்க்கெட் ஷேர் உடன் சாம்சங் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. அந்நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 73.6 மில்லியன் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டை ஒப்பிடுகையில் இது 1.2 சதவீதம் குறைவாகும்.
இந்த பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் 18 சதவீத மார்க்கெட் ஷேர் உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 56.6 மில்லியன் ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் நிறுவனம் உற்பத்தி செய்துள்ளதாம்.
கடந்தாண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு முதல் காலாண்டில் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களின் உற்பத்தி 2.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக சியோமி, ஓப்போ மற்றும் விவோ ஆகிய நிறுவனங்கள் முறையே 3, 4 மற்றும் 5-வது இடத்தை பிடித்துள்ளன. இவையும் உற்பத்தியில் சரிவை சந்தித்துள்ளன.