அறிந்து கொள்ளுங்கள்

இயந்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் 'செயற்கைத் தோல்': மனிதர்களைப் போலவே இனி ரோபோக்களும் வலியை உணரும்

Published On 2026-01-04 17:51 IST   |   Update On 2026-01-04 17:51:00 IST
  • "மின்னணு தோல்" தொழில்நுட்பம் ரோபோக்களின் எதிர்காலத்தையே மாற்றப்போகிறது.
  • ரோபோக்கள், திசுக்களின் மென்மை மற்றும் அழுத்தத்தைத் துல்லியமாக உணர இது உதவும்.

மனிதர்களைப் போலவே ரோபோக்களும் வலி மற்றும் உணர்வுகளை உடனடியாக உணர்ந்து எதிர்வினை ஆற்றும் செயற்கைத் தோலை உருவாக்கி ஹாங்காங் நகரப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அசத்தியுள்ளனர்.

Neuromorphic E-Skin என்ற தோல் மூலம் உணர்வுகளை உடனுக்குடன் ரோபோக்கள் கண்டறிந்து, தற்காத்துக் கொள்ளும் திறனை பெறுகிறது.

"மின்னணு தோல்" தொழில்நுட்பம் உலகில் ஒரு மிகப்பெரிய புரட்சியாகப் பார்க்கப்படுகிறது. மனிதர்களைப் போலவே மென்மையான உணர்வுகளை உணரக்கூடிய "மின்னணு தோல்" (Electronic Skin அல்லது E-Skin) தொழில்நுட்பம் ரோபோக்களின் எதிர்காலத்தையே மாற்றப்போகிறது.

மின்னணு தோல் (E-Skin) என்றால் என்ன என்று பார்க்கலாம்..

இது மிக மெல்லிய, நெகிழ்வான ஒரு படலம். இதில் ஆயிரக்கணக்கான நுண்ணிய சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். மனித உடலில் உள்ள நரம்புகள் எப்படி மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறதோ, அதேபோல இந்த சென்சார்கள் தொடுதல், அழுத்தம் மற்றும் வெப்பநிலையை ரோபோவின் கணினிக்கு அனுப்பும்.

ஒரு ரோபோ முட்டையை உடைக்காமல் தூக்குவதற்கும், அதே சமயம் ஒரு கனமான இரும்புத் தூணைத் தூக்குவதற்கும் எவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை இந்த உணர்வுதான் தீர்மானிக்கும்.

அறுவை சிகிச்சை செய்யும் ரோபோக்கள், திசுக்களின் மென்மை மற்றும் அழுத்தத்தைத் துல்லியமாக உணர இது உதவும்.

முதியவர்கள் அல்லது நோயாளிகளைப் பராமரிக்கும் ரோபோக்கள், மனிதர்களைக் காயப்படுத்தாமல் மென்மையாகக் கையாள இந்தத் தொழில்நுட்பம் அவசியம்.

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தொடு உணர்வு வெறுமனே தொடுதலை உணர்வது மட்டும் போதாது, அது என்ன பொருள் என்பதைப் புரிந்துகொள்ள AI பயன்படுத்தப்படுகிறது.

உதாரணமாக, ஒரு ரோபோ கண்ணை மூடிக்கொண்டு ஒரு பையைத் தொட்டாலும், அதன் மென்மை மற்றும் வடிவத்தை வைத்து அது "ஆப்பிள்" அல்லது "டென்னிஸ் பந்து" என்பதைக் கண்டறியும் திறன் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS), அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளனர்.

சில ஆய்வுகளில், மனித நரம்புகளை விட வேகமாகச் செயல்படும் "செயற்கை நரம்பு மண்டலங்கள்" உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தத் தொழில்நுட்பம் முழுமையடையும் போது, ரோபோக்கள் வெறும் இயந்திரங்களாக இல்லாமல், மனிதர்களுக்கு இன்னும் நெருக்கமான, பாதுகாப்பான உதவியாளர்களாக மாறும்.

Tags:    

Similar News