தொழில்நுட்பம்
அமெரிக்காவில் சீன செயலிகளுக்கு தடை
டிக்டாக்கை தொடர்ந்து சீனாவின் மேலும் 8 செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதித்து டிரம்ப் உத்தரவு.
கொரோனாவைரஸ் பரவலுக்கு சீனாதான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதனால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
இதற்கிடையே அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி சீனாவை சேர்ந்த டிக்டாக் மற்றும் வீசாட் செயலிக்கு அமெரிக்காவில் டிரம்ப் தடை விதித்தார். அந்த செயலியை அமெரிக்கா நிறுவனத்துக்கு விற்கவும் காலக்கெடு விதித்தார்.
இந்த செயலிகள் அமெரிக்க மக்களின் தகவல்களை திருட வாய்ப்பு உள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்தநிலையில் சீனாவை சேர்ந்த மேலும் 8 செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அலிபே, உள்பட 8 சீன செயலிகளுக்கு அமெரிக்க தேசிய பாதுகாப்பை காக்கும் வகையில் தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். இந்த தடை 45 நாட்களில் அமலுக்கு வருகிறது.