வழிபாடு

ரங்கா.. ரங்கா.. உன் திருவடி சரணம்!

Published On 2025-12-30 13:48 IST   |   Update On 2025-12-30 13:48:00 IST
  • பெருமை மிக்க ஸ்ரீரங்கம், ஒருகாலத்தில் அழகிய தீவு போல் அமைந்திருந்ததாகச் சொல்கிறது புராணம்.
  • ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதம் மட்டுமின்றி, ஆடி மற்றும் தை மாதங்களிலும் அரையர் சேவை உண்டு.

நம் வாழ்க்கையில் என்ன செய்தாலும், எத்தனை நல்லவை செய்திருப்பினும், எவ்வளவு அல்லவை செய்திருந்தாலும், அரங்கனை, ரங்கநாதனை, ரங்கநாதப் பெருமாளை இறுதியில் சரணடைந்துவிட்டால் மோட்சம் நிச்சயம்; வைகுண்டத்தில் சொர்க்கவாசல் நமக்குத் திறக்கப்படும் என்று புராணம் சொல்லிவைத்த மாபெரும் விஷயத்தை மிக எளிதாக உணர்த்தியிருக்கிறார்கள்,

இத்தனை பெருமை மிக்க ஸ்ரீரங்கம், ஒருகாலத்தில் அழகிய தீவு போல் அமைந்திருந்ததாகச் சொல்கிறது புராணம். காவிரி - கொள்ளிடம் ஆறுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம், இன்றைக்கும் தன் அழகுடன், தனியழகுடன், மிகுந்த சாந்நித்தியத்துடன் அமைந்திருக்கிறது. சயனித்த திருக்கோலத்தில் இருந்தபடி, இந்த உலகுக்கும் உலக மக்களுக்கும் விடியலைத் தந்து சேவை சாதித்துக் கொண்டிருக்கிறார் ரங்கநாதப் பெருமாள். வைகுண்டத்தை திருநாடு என்று போற்றுவார்கள். அந்தத் திருநாட்டிற்குச் செல்பவர்கள் எப்போதும் பெருமாளைத் தரிசிக்கும் பாக்கியம் பெறுவர். அவர்களுக்கு நித்யசூரிகள் என்று பெயர். இவர்களுக்கு பசி, தாகம், உறக்கம் எனும் எந்த உணர்வும் இருக்காது. பேரானந்தத்தில் மூழ்கி இருப்பார்களாம்.

தமிழகத்தில் ஸ்ரீரங்கம், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய மூன்று திவ்யதேசங்களில் மட்டும் வைகுண்ட ஏகாதசியையொட்டி அரையர் சேவை நடக்கிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்துநாட்களை பகல் 10 என்றும், (மார்கழி அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் தசமி வரை) வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் 10 நாட்களை (ஏகாதசி முதல் பஞ்சமி வரை) ராப்பத்து நாட்களாகவும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதம் மட்டுமின்றி, ஆடி மற்றும் தை மாதங்களிலும் அரையர் சேவை உண்டு.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்கோட்டை ஸ்ரீநரசிம்ம பெருமாள் கோவிலில், அபிநயம் இல்லாமல் தாளத்தோடு மட்டும் அரையர் சேவை இன்றைக்கும் நடந்து வருகிறது.

ஆழ்வார்கள் பாடிய பாடல்களைத் தொகுத்தவர் நாதமுனிகள். இதுவே நாலாயிர திவ்ய பிரபந்தம் எனப்படுகிறது. இவர் ஒருமுறை கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் மீதான 'ஆராவமுதே' என்று தொடங்கும் திவ்யபிரபந்த பாசுரத்தை சிலர் பாடக்கேட்டு அதில் மெய்மறந்து போனார்.

அதில் 'ஓராயிரத்துள் இப்பத்தும்' எனும் அடி வந்தது. அவர்களிடம், ''நீங்கள் பாடிய பாடலின் பொருள்படி, ஆயிரத்தில் பத்து பாடல் போக மீதி 990 பாடல்கள் எங்கே?'' என்று கேட்டார். ஆனால், அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே நாதமுனிகள் ஆழ்வார் திருநகரி சென்று இந்தக் கேள்வியை மதுரகவி ஆழ்வாரின் வம்சாவளியினரிடம் கேட்டார்.அவர்கள் பாசுரங்களைப் பெறுவதற்கு ஒரு வழியைக் கூறினர். மதுரகவி ஆழ்வாரின் பாசுரங்களை 12 ஆயிரம் முறை யார் ஒருவர் பாடுகிறாரோ, அவர் முன் ஆழ்வாரே தோன்றி அருள் செய்வார். அவரிடம் விபரம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். நாதமுனிகளும் 12 ஆயிரம் முறை மதுரகவி ஆழ்வாரின் பாசுரத்தைப் படித்தார்.

ஆழ்வாரின் அருளால் ஆழ்வார்கள் பாடிய அனைத்துப் பாசுரங்களையும் பெற்றார்.

அந்தப் பாடல்களுக்கு தமிழ்ப்பண் அமைப்பில் இசையமைத்து திவ்ய பிரபந்தம் என்று பெயரிட்டார். தனது சீடர்களான உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன், மேலையகத்தாழ்வான் மூலம் அந்தப் பாசுரங்களை திவ்யதேசங்கள் எங்கும் பாடச் செய்தார் என்கிறது ஸ்ரீரங்கம் புராணம்.

மார்கழி மாதத்தில் ஏதேனும் ஒருநாளில், திருச்சி ஸ்ரீரங்கத்துக்கு வந்து ஸ்ரீரங்கரையும் ரங்கநாயகித் தாயாரையும் ஒருமுறை வழிபட்டாலே, நம் பாவங்கள் அனைத்தும் விலகும்; பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தீரும். அரங்கனின்சந்நிதிக்கு வருவோம்.

அவனின் பேரருளைப் பெறுவோம்!

Tags:    

Similar News