மாசி மாத பூஜைக்காக நடை திறப்பு - சபரிமலையில் திரண்ட ஐயப்ப பக்தர்கள்
- மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி கோவில் நடையை திறந்துவைத்தார்
- பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் மட்டுமின்றி, மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை திறந்திருக்கும். அதன்படி மாசி மாத பூஜைக்காக நேற்று (13-ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்துவைத்தார். அதன் பிறகு பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று மாலை நடை திறக்கப்பட்டபிறகு, எந்த பூஜைகளும் நடைபெறவில்லை. இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை சாத்தப்பட்டது.
இன்று மாதாந்திர பூஜை தொடங்கியது. இதை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று முதல் வருகிற 17-ந்தேதி வரை தினமும் நிர்மால்ய தரிசனம், கணபதிஹோமம், உஷ பூஜை, நெய்யபிஷேகம், களப பூஜை, கலசாபிஷேகம், உச்ச பூஜை, புஷ்பாபிஷேகம், படி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும்.
கேரளாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்ததால் அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் நேற்று சபரிமலைக்கு பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. நள்ளிரவு முதல் பஸ்கள் வழக்கம்போல் ஓடியதால், இன்று பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது.
இதனால் பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.