கோவில் கொடைவிழாவில், கோவிலுக்கு சப்பர ஊர்வலம் சென்ற காட்சி.
கீழக்கடையம் பத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழாவில் சப்பர வீதி ஊர்வலம்
- விழாவில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கின்றனர்.
- பொங்கல் நிகழ்வு, காப்பு களைந்து அம்மன் வீதி உலா நடைபெறுகிறது.
கடையம்:
கீழக்கடையம் 18 பட்டி நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா கடந்த 27-ந்தேதி கால்நாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றது.
விழாவில் தினமும் காலை, மாலை தீபாராதனை, சிறப்பு பூஜை, அன்னதானம் நடைபெற்றது. கடந்த 3-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் வடக்கு உடையார் பிள்ளையார் கோவிலில் இருந்து 18 பட்டி தீர்த்தம் மேளதாளம், வானவேடிக்கையுடன் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம், மலர் அலங்காரம், தீபாராதனை, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து வந்தனர். இதையடுத்து ஒவ்வொரு நாளும் அன்னதானம், பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பூஜைகளுடன் விழா நடைபெற்றன.
நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) காலையில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, சப்பர ஊர்வலம், மதியம் அல தீர்த்தம் எடுத்து வரப்பட்டு மதிய கொடை சிறப்பு வழிபாடு, அம்மன் ஊர்விளையாடல், இரவு அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை, இரவு அல தீர்த்தம் கொண்டு வரப்பட்டு நையாண்டி மேளம் வானவேடிக்கையுடன் சாம கொடை, படைப்பு தீபாராதனை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நேற்று அதிகாலை 2 மணிக்கு அம்மன் பூம்பல்லக்கில் வீதி உலா வருதல், அதிகாலை 4 மணிக்கு பத்திரகாளியம்மன், முப்புடாதியம்மன் தேரில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மூலஸ்தான பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சப்பர ஊர்வலம் சென்று படைப்பு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து அன்னதானம் நடைபெற்றது.
விழாவில் இன்று முதல் 16-ந்தேதி வரை இரவில் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இதையடுத்து 17-ந்தேதி செவ்வாய்க்கிழமை 8-ம் பொங்கல் நிகழ்வு, காப்பு களைந்து அம்மன் வீதி உலா நடைபெறுகிறது.
விழாவில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கொடைவிழா நடத்தும் 7-ம் திருநாள் மண்டகப்படிதாரர்கள், கீழக்கடையம் வரிதாரர்கள் மற்றும் 18 பட்டி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.