வழிபாடு

மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் இன்று மாலை திறப்பு

Published On 2026-02-12 09:51 IST   |   Update On 2026-02-12 09:51:00 IST
  • மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றுகிறார்.
  • மாசி மாத பூஜையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்.

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் மட்டுமின்றி, மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை திறந்திருக்கும்.

அதன்படி மாசி மாத பூஜை நாளை (13-ந்தேதி) தொடங்கி வருகிற 17-ந்தேதி வரை நடக்கிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றுகிறார்.

அதன் பிறகு பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இன்றைய தினம் எந்த பூஜைகளும் நடக்காது. இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை சாத்தப்படும். பின்பு நாளை அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.

நிர்மால்ய தரிசனத்துக்கு பின் தந்திரி மகேஷ் மோகனரு, ஐயப்பன் சிலையில் அபிஷேகம் நடத்தி நெய் அபிஷேகத்தை தொடங்கி வைப்பார். அதைத்தொடர்ந்து கணபதி ஹோமம், உஷ பூஜை, களபாபிஷேகம், உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை நடைபெறும்.

மாதாந்திர பூஜை நடக்கக்கூடிய 5 நாட்களும் உதயாஸ்தமன பூஜையும், இரவு 7 மணிக்கு படி பூஜையும் நடைபெறும். நாளை முதல் வருகிற 17-ந்தேதி வரை நெய் அபிஷேகம் உள்ளிட்ட அனைத்து வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடை பெறும்.

மாசி மாத பூஜையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். அதற்கான முன்பதிவு கடந்த வாரம் தொடங்கியது. முன்பதிவு செய்த பக்தர்களே சன்னிதானத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

Tags:    

Similar News