புதுச்சேரியில் பிரசாரம் செய்ய டாக்டர் ராமதாஸ் வருவாரா?
- வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்பு வரை தேர்தலில் போட்டியிட நமச்சிவாயம் தயக்கம் காட்டி வந்தார்.
- கடந்த 2 நாட்களாக அமைச்சர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளை வீடு தேடிச்சென்று சந்தித்து, ஆதரவு திரட்டி வருகிறார்.
புதுச்சேரி:
தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளராக புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.
வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்பு வரை தேர்தலில் போட்டியிட அமைச்சர் நமச்சிவாயம் தயக்கம் காட்டி வந்தார். பா.ஜனதா மேலிடத்தின் உத்தரவை ஏற்று வேட்பாளராக களம் இறங்கியவுடன் தேர்தல் பணிகளில் அசுர வேகம் காட்டி வருகிறார்.
கடந்த 2 நாட்களாக புதுச்சேரி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தொகுதி பிரமுகர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளை வீடு தேடிச்சென்று சந்தித்து, ஆதரவு திரட்டி வருகிறார்.
சென்னைக்கு சென்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்தார்.
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசையும் சந்தித்து நலம் விசாரித்து, ஆசி பெற்றார். தொடர்ந்து தனக்காக புதுச்சேரிக்கு வந்து பிரசாரம் செய்ய வேண்டும் என டாக்டர் ராமதாசிடம் கேட்டுக் கொண்டார்.
அதற்கு ராமதாஸ் பதிலளிக்காவிட்டாலும், கடலூர், விழுப்புரம் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இதனால் புதுச்சேரியிலும் அவர் பிரசாரம் செய்ய வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில் புதுவை மாநில பா.ம.க. தலைவர் கணபதியிடம், நமச்சிவாயத்தை வெற்றி பெறச் செய்து எம்.பி.யாக பாராளுமன்றத்துக்கு அனுப்ப தீவிரமாக பணியாற்றும்படி உத்தரவிட்டுள்ளார்.