புதுச்சேரி

மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓட்டம்

Published On 2023-06-07 10:35 GMT   |   Update On 2023-06-07 10:35 GMT
  • திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் அந்தந்த பகுதிகளில் சி.சி.டி.வி.பதிவுகளை ஆய்வு செய்தனர்.
  • தலைமறைவான ராம்கியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை ஒதியஞ்சாலை போலீஸ் நிலைய பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் நடந்து வந்தது.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் அந்தந்த பகுதிகளில் சி.சி.டி.வி.பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில் கிடைத்த தகவலின் பேரில் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த ராம்கி (வயது21) என்ற வாலிபரை ஒதியஞ்சாலை போலீசார் பிடித்து நேற்று விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

போலீஸ் நிலையத்தில் அமர்ந்திருந்த ராம்கி திடீரென போலீஸ் நிலையத்தில் இருந்து நைசாக வெளியேறி சாலையில் ஓடினார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த வாலிபரை விரட்டி சென்றனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் தப்பிச்சென்று விட்டார்.

தலைமறைவான ராம்கியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸ் நிலையத்திலிருந்து வாலிபர் தப்பி ஓடியதும் அவரை போலீசார் விரட்டிச் சென்றும் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் போலீசார் திரும்பியதை கண்ட பொது மக்கள் புதுவை போலீசாரின் நிலையை கிண்டலாக பேசினர்.

Tags:    

Similar News