உலகம்

எங்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி - கனடா பாராளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் பேச்சு

Published On 2023-09-22 21:10 GMT   |   Update On 2023-09-22 21:51 GMT
  • உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
  • ரஷிய படையெடுப்பிற்குப் பிறகு முதல் முறையாக அதிபர் ஜெலன்ஸ்கி கனடா சென்றுள்ளார்.

ஒட்டாவா:

உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றன.

இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்ற ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா ஆகியோரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர்.

இதையடுத்து, அதிபர் ஜோ பைடன் மற்றும் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது உக்ரைனுக்கு கூடுதலாக ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அமெரிக்கப் பயணத்தைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு விமான நிலையத்தில் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா ஆகியோரை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரில் சென்று வரவேற்றார்.

இந்நிலையில், கனடா நாட்டு பாராளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

ரஷியாவின் ஆக்கிரமிப்பு நமது வெற்றியின் மூலம் முடிவுக்கு வர வேண்டும். உக்ரைனில் மீண்டும் ஒரு இனப்படுகொலையை நிகழ்த்த முயற்சி செய்யாத வகையில் ரஷியா நிரந்தரமாக தோற்கடிக்கப்பட வேண்டும்.

கனடா அரசு வழங்கிய ராணுவ உதவி மற்றும் பொருளாதார உதவிகளால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்ததற்காக கனடா அரசுக்கு நன்றி. கனடா அரசு எங்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி என தெரிவித்தார்.

ரஷிய படையெடுப்பிற்குப் பிறகு முதல் முறையாக ஜெலன்ஸ்கி கனடா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News