பகல்காம் தாக்குதல்: குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - குவாட் அமைப்பு கூட்டறிக்கை
- குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்தது.
- பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்தது.
இதில் இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர், அமெரிக்க மந்திரி மார்கோ ரூபியோ, ஜப்பான் மந்திரி தகேஷி இவாயா, ஆஸ்தி ரேலிய மந்திரி பென்னி வோங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், "பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். இந்தக் கண்டிக்கத்தக்க செயலுக்குக் காரணமானவர்கள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் நிதியுதவி செய்தவர்கள் மீது எந்த தாமதமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளும் சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் கீழ் தங்கள் கடமைகளுக்கு இணங்க, இந்த விஷயத்தில் அனைத்து தொடர்புடைய அதிகாரிகளுடனும் தீவிர மாக ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.