Petrol Price: பாகிஸ்தானில் பெட்ரோல் விலை அதிரடி உயர்வு.. இந்தியாவிலும் உயருமா?
- ஒரு லிட்டர் பெட்ரோல் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 321 க்கு விற்பனை ஆகிறது.
- சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 க்கு விற்பனை.
ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதலும், பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலும் ஒரு வாரத்தை எட்டியுள்ளது.
மேலும் உலகின் ஐந்தில் ஒரு பங்கு அதாவது 20 சதவீத எண்ணெய் தேவைக்கான ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.
இதனால் மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யமுடியாமல் கப்பல்கள் தவித்து வருகின்றன.
இதனால் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு பெட்ரோல், டீசல், எரிவாயு விலைகள் உயர்ந்து வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சில நாட்களிலேயே ஒரு பேரல் 78 டாலரிலிருந்து 107 டாலராக உயர்ந்துள்ளது.
இதனிடையே பாகிஸ்தானில் பெட்ரோல் விலையை ரூ.55 உயர்த்தி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
இதன் மூலம் பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 321 க்கு விற்பனை ஆகிறது. டீசல் ஒரு லிட்டர், பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 335.86 க்கு விற்பனை ஆகிறது
பாகிஸ்தான் தனது 90% எண்ணெய் மற்றும் 99% எல்என்ஜி எரிவாயு இறக்குமதிக்கு ஹார்முஸ் ஜலசந்தி பாதையையே நம்பியுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானவுடன் லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கிலோமீட்டர் கணக்கில் வாகனங்கள் வரிசையில் நின்றன.
பல இடங்களில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. சில பங்குகளில் பெட்ரோல் இல்லை என்று மூடப்பட்டதால் பதற்றம் நிலவியது.
மேலும், எரிபொருள் தட்டுப்பாட்டைக் குறைக்க ஊழியர்களுக்கு Work From Home முறையை அமல்படுத்துவது குறித்தும் பாகிஸ்தான் அரசு ஆலோசித்து வருகிறது.
மறுபுறம், ஆப்கானிஸ்தான் உடனான மோதல் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே பிற ஆசிய நாடுகளிலும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் பெட்ரோல் டீசல் பங்குகளில் இருப்பு உள்ளபோதே வாங்கி வைக்க மக்களை படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தற்சமயம் உயரவில்லை என்றாலும் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.92.61 க்கும் விற்பனையாகி வருகிறது.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, "இந்தியாவில் எரிசக்தி தட்டுப்பாடு எதுவும் இல்லை, எரிபொருள் விநியோகம் தடையின்றித் தொடரும்" என்று உறுதியளித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக வரும் செய்திகள் வதந்தி என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மறுத்துள்ளது.
இதற்கிடையே நேற்று நள்ளிரவு நாடு முழுவதும் 14.2 கிலோ வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் 14.2 கிலோ வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ. 928.50 க்கு விற்கப்படுகிறது. அதேபோல வணிக பயன்பாட்டுக்கான சமையல் சிலிண்டர் விலை ரூ.115 உயர்ந்துள்ளது.