நேபாள பாராளுமன்ற தேர்தல்: இளைஞர்கள் ஆதரவு பெற்ற ராஷ்ட்ரிய சுதந்திர கட்சி முன்னிலை
- நேற்று மாலை வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
- இளைஞர் போராட்டங்களின் போது ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சி முக்கிய பங்காற்றியது.
நேபாளத்தில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்தது. கடந்த ஆண்டு ஜென் இசட் இளம் தலைமுறையினர் நடத்திய போராட்டத்தால் அப்போதைய பிரதமா் கே.பி.சா்மா ஒலி பதவி விலகலுக்கு பிறகு அங்கு தேர்தல் நடந்தது.
நேபாள பாராளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் 275 இடங்கள் உள்ளன. இதில் 165 இடங்கள் நேரடித் தோ்தல் மூலமும் மீதமுள்ள 110 இடங்களுக்கு விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலும் உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். பெரும்பான்மைக்கு 138 இடங்கள் தேவை.
தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் கே.பி சர்மா ஒலியும், நேபாளி காங்கிரஸ் சாா்பில் அதன் தலைவா் ககன் தாபாவும் பிரதமா் வேட்பாளா்களாகக் களமிறங்கியுள்ளனா்.
அதேபோல் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி சாா்பில் 35 வயதான காத்மாண்டு பெருநகர மேயா் பாலேந்திர ஷா பாலன் பிரதமா் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.
நேற்று மாலை வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு சீட்டு எண்ணும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதில் 77 தொகுதிகளில் முன்னிலை நிலவரம் வெளியான நிலையில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி 59 தொகுதிகளில் முன்னிலை பெற்றது.
நேபாளி காங்கிரஸ் 9 தொகுதியிலும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் 5 தொகுதியிலும் முன்னிலை பெற்றிருந்தன. முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டாவின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதியில் முன்னிலை பெற்றிருந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கே.பி ஒலி அரசாங்கத்திற்கு எதிரான இளைஞர் போராட்டங்களின் போது ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சி முக்கிய பங்காற்றியது. அக்கட்சிக்கு இளைஞர்கள் அமோக ஆதரவு வந்த நிலையில் தேர்தலில் முன்னிலை பெற்று வருகிறது.