ICU-வில் தாய்.. ரூ.1.25 கோடி மருத்துவ செலவு - ரூ.50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ் - துபாயில் தத்தளிக்கும் தமிழர்
- கடந்த 40 நாட்களாக ஐசியுவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
- போர் பதற்றத்தால் அதன் கட்டணம் 7 மடங்கு உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த திலக் குமார் மற்றும் அவரது மனைவி ஷாமினி ரமேஷ் ஆகியோர் கடந்த 8 ஆண்டுகளாக துபாயில் பணியாற்றி வருகின்றனர்.
சமீபத்தில் அவர்களை பார்ப்பதற்காக துபாய் சென்ற திலக் குமாரின் தாயார், அங்கு கடுமையான பாக்டீரியா தொற்றுக்கு உள்ளானார்.
கடந்த 40 நாட்களாக அவர் அங்குள்ள மருத்துவமனையில் ஐசியு பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 3 லட்சம் ரூபாய் மருத்துவக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுவரை மொத்தப் மருத்துவ கட்டணம் 1.25 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.
இன்னும் இரண்டு மாதங்களுக்கு வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
செலவைக் குறைக்கத் தாயாரை இந்தியாவிற்கு அழைத்து வரத் திலக் குமார் திட்டமிட்டார்.
மார்ச் 4-ம் தேதி 7 லட்சம் ரூபாய் செலவில் வணிக ரீதியான மருத்துவ விமானத்தில் செல்ல அனுமதி கிடைத்தது. ஆனால், போர் பதற்றம் காரணமாக அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.
தற்போது தனியார் ஏர் ஆம்புலன்ஸ் மட்டுமே ஒரே வழி. போர் பதற்றத்தால் அதன் கட்டணம் 7 மடங்கு உயர்ந்து, 50 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஆனால் திலக் குமாரால் இவ்வளவு பெரிய தொகையைத் திரட்ட முடியவில்லை.
"நேரம் கடந்து கொண்டே செல்கிறது, எனது தாயை காப்பாற்றத் உதவ வேண்டும்" என்று திலக்குமார் NDTV வாயிலாக கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.