காத்மாண்டுவில், கனமழையால் நிரம்பி வழியும் பாகமதி நதி
நேபாளில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு - 47 பேர் உயிரிழப்பு
- காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
- இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே மிரிக் பகுதியில் கனமழை வெள்ளத்தால் பாலம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
நேபாளத்தில் நேற்று முதல் பெய்து வரும் கனமழை, திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்திய எல்லைக்கு அருகிலுள்ள கிழக்கு நேபாளத்தின் இலாம் மாவட்டத்தில் மட்டும் ஏற்பட்ட பல நிலச்சரிவுகளில் 35 பேர் கொல்லப்பட்டனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
தலைநகர் காத்மாண்டுவில் பாகமதி உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் காத்மாண்டு சாலைகள் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு நேபாளத்தில் உள்ள கோசி ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்வதால், கோசி தடுப்பணையின் 56 மதகுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன.
மேலும் நேபாளத்தில் நாளை வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையே இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே மிரிக் பகுதியில் கனமழை வெள்ளத்தால் பாலம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தால் சிலிகுரி - மிரிக் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த பகுதியின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலம் இடிந்த விபத்தில் பலர் நீரில் அடித்துச்செல்லப்பட்டதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.