உலகம்

அதிரடியை தொடரும் அமேசான், கூகுள் - மேலும் பலர் பணிநீக்கம்

Published On 2024-01-11 08:40 GMT   |   Update On 2024-01-11 08:40 GMT
  • உலகளவில் மக்களிடம் "வாங்கும் சக்தி" குறைந்து விட்டது
  • கடந்த ஆண்டே கூகுள் மற்றும் அமேசான் பல ஊழியர்களை நீக்கின

கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

உலகளவில் பெரும்பான்மையான மக்களிடம் "வாங்கும் சக்தி" (purchase power) குறைந்ததால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவைகள் குறைந்துள்ளது. நிறுவனங்களின் விற்பனையில் தேக்க நிலையையும், வீழ்ச்சியும் அதிகரித்து வருகின்றன.

2022 மார்ச்சில் தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர் மற்றும் 2023 அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர், அமெரிக்க-சீன வர்த்தக உறவில் நீடிக்கும் சிக்கல், சீனாவில் சரிய தொடங்கியுள்ள உள்நாட்டு பொருளாதாரம், நிலையற்ற கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பல காரணங்கள் இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

கடந்த வருடம் முதல் இதன் தாக்கம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் காலாண்டு அறிக்கையிலும் எதிரொலிக்க தொடங்கியதால், உலகின் பல முன்னணி தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் நஷ்டத்தை குறைக்க ஆட்குறைப்பை தொடங்கின.

"லே ஆஃப்" (layoffs) அல்லது ஜாப் கட்ஸ் (job cuts) என அழைக்கப்படும் இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக கடந்த ஆண்டே அமேசான், மைக்ரோசாப்ட், காக்னிசன்ட் மற்றும் கூகுள் உட்பட பல நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்தன.

தற்போது அடுத்த சுற்றில் மேலும் பல ஊழியர்களை அமேசான் மற்றும் கூகுள் நீக்கியுள்ளது.

அமேசான், முன்னரே ட்விட்ச் லைவ்ஸ்ட்ரீமிங் யூனிட்டில் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது. தற்போது ப்ரைம் வீடியோஸ் (Prime Videos) மற்றும் எம்ஜிஎம் ஸ்டூடியோ (MGM Studios) கிளைகளில் இருந்து நூற்றுக்கணக்கானவர்களை நீக்கியது.

கூகுள், செலவினங்களை கட்டுப்படுத்த டிஜிட்டல் அசிஸ்டன்ட், ஏஆர் (ஆக்மென்டட் ரியாலிட்டி), மற்றும் பொறியியல் துறைகளில் பணியாற்றியவர்களை நீக்கியது.

பொருளாதார மந்தநிலை நீடித்தாலோ, மேலும் நலிவுற்றாலோ இத்தகைய பணிநீக்கங்கள் கடுமையாக அதிகரிக்கும் என மனிதவள நிபுணர்கள் எச்சரிப்பதால் மென்பொருள் துறையில் வேலை செய்பவர்கள் கவலையில் இருக்கின்றனர்.

Tags:    

Similar News