DOOMSDAY: ஈரான் போருக்கு மத்தியில் அணு ஆயுதம் தாங்கி செல்லும் ஏவுகணை சோதனை நடத்திய அமெரிக்கா
- ஆயிரக்கணக்கான மைல்கள் பயணித்து இலக்கை துல்லியமாக தாக்கியது.
- ஹிரோஷிமா மீது வீசப்பட்ட அணு குண்டை விட 20 மடங்கு அதிக சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை சுமக்கும்.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டு சேர்ந்து கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் ஈரான் உச்ச தலைவர் காமேனி மற்றும் 700க்கும் அதிகமானோர் ஈரானில் கொல்லப்பட்டனர்.
ஈரான் பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.
போரானது ஒரு வாரத்தை எட்ட உள்ள நிலையில் அமெரிக்கா கண்டம் விட்டு கண்டம் பாயும் Minuteman III (Doomsday) ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளித் தளத்திலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின்போது ஆயிரக்கணக்கான மைல்கள் பயணித்து, பசிபிக் பெருங்கடலில் உள்ள மார்ஷல் தீவுகளுக்கு அருகே உள்ள இலக்கை துல்லியமாக தாக்கியது.
இந்த சோதனையின் போது ஏவுகணையில் அணு ஆயுதங்கள் எதுவும் பொருத்தப்படவில்லை. ஏவுகணையின் செயல்திறனை சோதிக்க மட்டுமே இந்த சோதனை நடத்தப்பட்டது.
இது பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட ஒரு வழக்கமான சோதனை என்றும், தற்போது ஈரானுடன் நடந்து வரும் மோதலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
டூம்ஸ்டே:
Minuteman III என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணை இரண்டாம் உலகப் போரின்போது ஹிரோஷிமா மீது வீசப்பட்ட அணு குண்டை விட 20 மடங்கு அதிக சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
இது மணிக்கு சுமார் 24,140 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. அதாவது, உலகின் எந்தப் பகுதியையும் 30 நிமிடங்களுக்குள் தாக்கும் வல்லமை கொண்டது.
ஒரே ஏவுகணை மூன்று வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் அணு ஆயுதத் தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்டது .
இது பேரழிவை ஏற்படுத்தும் என்பதால் 'உலகின் முடிவு' என்று பொருள்படும் 'டூம்ஸ்டே' என்று இந்த ஏவுகணை அழைக்கப்படுகிறது.