உலகம்

டிரம்ப் விதித்த வர்த்தக தடை எதிரொலி: அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: ஸ்பெயின் பிரதமர் பதிலடி

Published On 2026-03-05 07:14 IST   |   Update On 2026-03-05 07:14:00 IST
  • உலகிற்கு கேடு விளைவிக்கும் செயலுக்கு நாங்கள் உடந்தையாக இருக்க மாட்டோம்.
  • இது எங்கள் கொள்கை மற்றும் நலன்களுக்கு எதிரானது என கூறினார்.

மாட்ரிட்:

அமெரிக்காவின் வர்த்தக மிரட்டலுக்கு பயந்து எங்கள் முடிவை மாற்றிக்கொள்ள மாட்டோம் என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஸ்பெயின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக, ஸ்பெயினில் உள்ள கூட்டு ராணுவத் தளங்களை ஈரான் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்த அமெரிக்காவிற்கு ஸ்பெயின் அனுமதி மறுத்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், "பேச்சை கேட்காவிட்டால் ஸ்பெயின் உடனான வர்த்தகத்தை முற்றிலுமாக துண்டிப்போம்" என கடந்த சில நாட்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்பெயின் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் பெட்ரோ சான்செஸ், "ஈரான் போர் என்பது லட்சக்கணக்கான உயிர்களுடன் விளையாடும் 'ரஷியன் ரவுலட்' (ஒரே ஒரு தோட்டா மட்டும் நிரப்பப்பட்டு துப்பாக்கியில் தலையில் சுட்டு விளையாடுவது) போன்ற ஆபத்தானது.

வெறும் வர்த்தகப் பழிவாங்கல்களுக்கு பயந்து, உலகிற்கு கேடு விளைவிக்கும் செயலுக்கு நாங்கள் உடந்தையாக இருக்க மாட்டோம். இது எங்கள் கொள்கை மற்றும் நலன்களுக்கு எதிரானது" என திட்டவட்டமாக தெரிவித்தார்.

தெற்கு ஸ்பெயினில் உள்ள இரண்டு முக்கிய ராணுவத் தளங்கள் குறித்து பேசிய டிரம்ப். "ஸ்பெயின் அனுமதி அளிக்காவிட்டாலும், நாங்கள் நினைத்தால் அங்கு விமானங்களை இறக்கி பயன்படுத்த முடியும்" என தன்னிச்சையாக கூறினார். ஆனால், அந்த தளங்கள் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள சான்செஸ், போருக்கு 'நோ' என்ற வார்த்தைகளில் தனது நிலைப்பாட்டைச் சுருக்கினார்.

ஏற்கனவே காசா போரின் போது இஸ்ரேலை விமர்சித்த ஸ்பெயின், இப்போது ஈரான் விவகாரத்திலும் அமெரிக்காவை எதிர்ப்பது சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள ஸ்பெயின் மீது டிரம்ப் எப்படி தனிப்பட்ட முறையில் வர்த்தகத் தடையை விதிக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும், இந்த போர் ஈராக் போரைப் போலவே பயங்கரவாதத்தை மீண்டும் தூண்டிவிடும் என்றும் சான்செஸ் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News