டிரம்ப் கழுத்தில் தென்பட்ட மாற்றம் - வெள்ளை மாளிகை அறிக்கையால் வெளிவந்த உண்மை!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது கழுத்தில் ஏற்பட்ட சிவப்பு சொறிக்கு தடுப்பு நோக்கிலான சரும சிகிச்சை மேற்கொண்டு வருவதாக அவரது தனிப்பட்ட மருத்துவர் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், இந்த உடல்நிலை குறித்து மேலும் எந்த விவரங்களையும் பகிர வெள்ளை மாளிகை திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
கடந்த திங்கள்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற 'மெடல் ஆஃப் ஹானர்' விருது வழங்கும் விழாவில் டிரம்ப் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களில், அவரது கழுத்தின் வலது பக்கத்தில் –காலர் அருகே சிவப்பு நிறத்தில் புள்ளி புள்ளியாகப் பரவிய சொறி தெளிவாகத் தெரிந்தது.
புகைப்படங்கள் வேகமாக பரவிய நிலையில் விழாவுக்குப் பிறகு வெளியிடப்பட்ட சுருக்கமான அறிக்கையில், வெள்ளை மாளிகை மருத்துவர் டாக்டர் ஷான் பார்பரெல்லா, "அதிபர் ஒரு பொதுவான கிரீமை தோல் சிகிச்சையாகப் பயன்படுத்தி வருகிறார். இந்த சிகிச்சை ஒரு வாரம் மட்டுமே நீடிக்கும். சிவப்பு நிறம் இரண்டு-மூன்று வாரங்கள் வரை தொடரலாம்" என்று தெரிவித்தார்.
புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட்ட், "மருத்துவரின் அறிக்கையில் கூறப்பட்டதைத் தவிர வேறு எந்தத் தகவலும் என்னிடம் இல்லை" என்று சுருக்கமாக பதிலளித்தார்.
79 வயதான டிரம்பின் உடல்நிலை அவரது இரண்டாவது பதவிக்காலத்தில் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. அவரது கைகளில் அவ்வப்போது தென்படும் காயங்கள், கால்களில் ஏற்படும் வீக்கம் ஆகியவை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. ஜனவரி மாதத்தில் கைகளில் காயங்கள் தெரிந்தபோது, டிரம்ப் தானே "அடிக்கடி ஆஸ்பிரின் உட்கொள்வதால் ஏற்படுகிறது" என்று விளக்கினார்.
கடந்த ஜூலை மாதம் கணுக்கால்கள் வீங்கியிருந்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில், "நாள்பட்ட நரம்பு இரத்த ஓட்டக் குறைபாடு (Chronic Venous Insufficiency)" இருப்பது கண்டறியப்பட்டதாக மருத்துவர் அறிவித்தார். இது 70 வயதுக்கு மேற்பட்டோரிடையே மிகவும் பொதுவான, ஆபத்தற்ற நிலை என்றும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்றபோது அமெரிக்க வரலாற்றிலேயே மிக வயதான தலைவராக (78) பொறுப்பேற்ற டிரம்ப், தனது உடல்நிலையை முன்னாள் ஜனநாயகக் கட்சி அதிபர் ஜோ பைடனுடன் அடிக்கடி ஒப்பிட்டுப் பேசி வருகிறார்.