செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறுமியிடம் டிரம்ப் கேட்ட கேள்வி

Published On 2018-12-27 05:33 GMT   |   Update On 2018-12-27 05:33 GMT
அமெரிக்காவில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் சிறுமியிடம் கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியது. #DonaldTrump #MelaniaTrump
வாஷிங்டன்:

அமெரிக்காவில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நாடெங்கும் உள்ள குழந்தைகளுடன் ஜனாதிபதி டிரம்பும், அவரது மனைவி மெலானியாவும் தொலைபேசியில் உரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியின்போது கோல்மன் லாயிட் என்ற சிறுமியிடம் டிரம்ப் பேசினார்.

அப்போது அந்த சிறுமியிடம் அவர் நலம் விசாரித்தார். கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து சற்றும் எதிர்பாராத வகையில், “சாண்டா கிளாசை (கிறிஸ்துமஸ் தாத்தா) நீ நம்புகிறாயா?” என டிரம்ப் கேள்வி எழுப்பினார்.

அந்தக் கேள்வியை எதிர்பார்த்திராத அவள், “ஆமாம் சார்” என்று கூறி சமாளித்து விட்டாள். அவளிடம் அந்தப் பதிலை எதிர்பார்த்திராத டிரம்ப், “சரி, சந்தோஷமாக இருங்கள்” என்று கூறினார்.


கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தில் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு முக்கிய இடம் உண்டு. அப்படிப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தாவை நீ நம்புகிறாயா என அதிபர் டிரம்ப், சிறுமியிடம் எழுப்பிய கேள்வி அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

தெற்கு கரோலினா மாகாணத்தை சேர்ந்த அந்த சிறுமி, டிரம்பிடம் “சாண்டா கிளாசை நம்புகிறேன்” என கூறி விட்டாலும், அவர் கேட்ட கேள்விக்கு உண்மையிலேயே தனக்கு அர்த்தம் தெரியவில்லை என்று ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறாள்.

அதே நேரத்தில் நாட்டின் அதிபதியான டிரம்ப், தங்கள் மகளிடம் பேசியதில் கோல்மன் லாயிட்டின் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #DonaldTrump #MelaniaTrump
Tags:    

Similar News