செய்திகள்

ஆங்கிலக் கால்வாயில் படகுகளில் தத்தளித்த 40 அகதிகள் மீட்பு

Published On 2018-12-26 05:16 GMT   |   Update On 2018-12-26 05:16 GMT
கிறிஸ்துமஸ் நாளில் ஆங்கிலக் கால்வாயின் வெவ்வேறு இடங்களில் தத்தளித்த 40 அகதிகளை கடலோர பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். #EnglishChannel #MigrantsRescued
லண்டன்:

உள்நாட்டுப் போர், வன்முறை மற்றும் வறுமை காரணமாக சிரியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அகதிகளாக வெளியேறி, ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றவண்ணம் உள்ளனர். இவ்வாறு செல்பவர்களில் ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்ளும்போது பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் நாளன்று அகதிகள் பலர், படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரிட்டனுக்குள் நுழைய முயன்றுள்ளனர். ஆட்கடத்தும் கும்பல் மூலம் அவர்கள் சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் பாதுகாப்பு உடை அணியாமல் சாதாரண படகில் பயணம் செய்துள்ளனர். ஒரு படகு பழுதடைந்ததால் அதில் பயணித்தவர்கள் தத்தளித்துக்கொண்டிருந்தனர்.



இதையடுத்து, கடலோர காவல்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலமாகவும், படகுகளில் சென்றும் அவர்களை மீட்டனர். இவ்வாறு ஆங்கிலக் கால்வாயின் 5 இடங்களில் இருந்து 2 குழந்தைகள் உள்ளிட்ட 40 அகதிகள் மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. குழந்தைகள் 2 பேரும் பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பெரியவர்கள் குடியேற்ற அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் சிலர்  ஈராக், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இதேபோல் கடந்த சனிக்கிழமையன்று பிரிட்டன் நோக்கி சென்ற 16 அகதிகளை பிரான்ஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி மீட்டது குறிப்பிடத்தக்கது. #EnglishChannel #MigrantsRescued

Tags:    

Similar News