செய்திகள்

நெதர்லாந்தில் முகம்மது நபி குறித்த கார்டூன் போட்டி - பாக். பிரதமர் இம்ரான் கான் கண்டனம்

Published On 2018-08-29 10:12 GMT   |   Update On 2018-08-29 10:12 GMT
நெதர்லாந்தில் முகம்மது நபி குறித்து எம்.பி ஒருவர் நடத்தும் கார்டூன் போட்டிக்கு பாகிஸ்தான் பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:

நெதர்லாந்தில் வலதுசாரி கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கீர்ட் வில்டெர்ஸ் முகம்மது நபி குறித்து கார்டூன் போட்டி நடத்த திட்டமிட்டிருந்தார். போட்டியில் கலந்து கொள்ள நூற்றுக்கணக்கானவர்கள் முன்பதிவு செய்துள்ளதாகவும், கார்டூன்களை பாராளுமன்றத்தில் உள்ள தனது அறையில் வைக்க இருப்பதாகவும் வில்டெர்ஸ் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த கார்டூன் போட்டிக்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இன்று கூடிய அந்நாட்டு பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் இது தொடர்பாக தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

இதனை அடுத்து பேசிய பிரதமர் இம்ரான் கான், இது போன்ற செயல்களால் முஸ்லிம்கள் எவ்வளவு மனவேதனை அடைவார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை என கூறினார். மேலும், ஆளும் பிடிஐ கட்சி நெதர்லாந்து எம்.பி.ஐ கண்டித்து லாகூர் முதல் இஸ்லாமாபாத் வரை கண்டன பேரணி நடத்த உள்ளனர். 


கீர்ட் வில்டெர்ஸ்

இதற்கிடையே, வில்டெர்ஸின் கார்டூன் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நெதர்லாந்து வெளியுறவு மந்திரியிடம் தொடர்பு கொண்டு பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி குரேஷி பேசியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என அவர் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

மேலும், ஐநா சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிலும் இது தொடர்பாக முறையிடப்படும் எனவும் குரேஷி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News