தமிழ்நாடு செய்திகள்

ரஜினி, விஜயகாந்தை விட விஜய் பெரிய ஆளா?- வேல்முருகன் கேள்வி

Published On 2025-06-16 10:48 IST   |   Update On 2025-06-16 10:48:00 IST
  • எந்த நடிகர்களாக இருந்தாலும் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பு என்ன?
  • அரசியலுக்கு வாங்க... மக்களோடு நில்லுங்கள்.

தளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வேல்முருகன் பேசியதாவது:-

கலைஞர் ஆட்சியில் போராடி வாதாடி இன்றைக்கு 36 மெடிக்கல் காலேஜ் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதனை கொண்டு வந்தவன் வேல்முருகன், கூத்தாடி என்றால் உங்களுக்கு குறைந்து விட்டது என்கிறீர்கள். கூத்து என்றால் எனது தமிழனின் மரபு வழி கலையாகும், அதில் என்ன உங்களுக்கு குறைச்சல்.

எந்த நடிகர்களாக இருந்தாலும் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பு என்ன? வேல்முருகன் ஆற்றிய பங்களிப்பு என்ன? ஒரே மேடையில் விவாதிக்க தயாராக இருக்கிறேன். போராளிகளை பற்றி போராளிகளிடம் மைக் நீட்டி கேளுங்கள். அவர்களுக்கு போராளிகள் பற்றி தெரியாது. அவர்களின் உலகம் வேறு. எங்கள் அண்ணனை விமர்சித்து விட்டீர்கள் என்கிறார்கள். பள்ளி மாணவர்களை வைத்து பேச வைக்கிறார்கள் நாங்கள் தற்குறி என்கின்றனர். அவர்கள் தான் தற்குறி.

உங்கள் அண்ணன் மட்டுமல்ல இந்த நாட்டின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்ட ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்றோர் தவறு செய்தபோது அதை தவறு என்று கூறியவன் நான். ரஜினி ரசிகர்கள், விஜயகாந்த் ரசிகர்களை விட நீங்கள் என்ன பெரிய ஆள்களா? இவர்கள்தான் மாணவர்களை ஊக்கப்படுத்துகிறார்களாம். இவர்கள்தான் பரிசுகளை கொடுக்கிறார்களாம்.

தமிழ்நாட்டில் துணை நடிகர் பாலா என்பவர் கதாநாயகன் அல்ல. தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு வீடுகள் கட்டி, ஆம்புலன்ஸ் வாங்க உதவி புரிந்து வருகிறார். அவர் சூட்டிங் நடத்துவதில்லை. ஷோ நடத்துவதில்லை.

ராகவா லாரன்ஸ் தான் சம்பாதித்த பணத்தை எத்தனையோ முதியோர் இல்லங்கள், ஆசிரமங்களுக்கு வழங்கி வருகிறார். அவர் எப்போதும் சூட்டிங் நடத்தவில்லை ஷோ நடத்தவில்லை. அரசியலுக்கு வாங்க... மக்களோடு நில்லுங்கள்.

நீங்கள் எல்லாம் 10-வது 12-வது படிக்கும் மாணவர்களுக்கு பரிசு கொடுத்து வருகிறீர்கள். கடலூர் மாவட்டத்தில் ஏழை, எளிய மாணவர்கள் எதிர்கால இந்தியாவின் அப்துல்கலாம்களாக வரவேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஒரு பத்திரிகை இல்லாமல் ஒரு புகைப்படக்காரர் இல்லாமல் செல்பி எடுக்காமல் ஒரு கோடி ரூபாய் நிதியை அறிவித்து விஞ்ஞான கல்விக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உதவியவன் நான் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News