'இயக்கத்தின் தலைவர்கள் சொன்னால் அதற்கு பதில் சொல்லலாம்' - மாணிக்கம் தாகூர் கருத்துகளுக்கு அமைச்சர் பெரியசாமி பதில்
- 9 லட்சம் பேரின் முதியோர் உதவித் தொகையை நிறுத்திய பெருமை அ.தி.மு.க.வை சேரும்.
- டி.என்.பி.எஸ்.சி.-2 தேர்வு நடைபெறாததற்கு நிர்வாகத்திறமை இல்லை என சொல்வதை ஏற்க முடியாது.
திண்டுக்கல்லில் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டி.என்.பி.எஸ்.சி.-2 தேர்வு நடைபெறாததற்கு நிர்வாகத்திறமை இல்லை என சொல்வதை ஏற்க முடியாது. இந்தியாவிலேயே நிர்வாகத்திற்கு பெயர்போன இயக்கம் தி.மு.க.தான். தமிழ்நாடு தலைசிறந்த நிர்வாகமும், மாநில வளர்ச்சியிலும் முதலிடம் என மத்திய அரசே ஒப்புக் கொண்டுள்ளது. எல்லாத்துறையிலும் தமிழ்நாடு வளர்ந்துள்ளது. தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று உள்ளது.
காங்கிரஸ் கட்சி கூட்டணிக்காக குழு அமைத்து 36 நாட்கள் ஆகிவிட்டது. தி.மு.க. பதில் சொல்லவில்லை என மாணிக்கம் தாகூர் எம்.பி கூறி உள்ளார். நான் ஒரு கட்சியின் அமைச்சராக இருக்கிறேன். நாங்கள் கட்டுப்பாடுடன் வளர்ந்தவர்கள். கருத்து என்பது கட்சிக்கு உடன்பாடு உள்ளதாக இருக்க வேண்டும். மாணிக்கம் தாகூர் எம்.பி. தினமும் அறிக்கை விடுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இயக்கத்தின் தலைவர்கள் சொன்னால் அதற்கு பதில் சொல்லலாம்.
தமிழ்நாடு அரசு அதிகமாக கடன் வாங்குவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். ஏற்கனவே இருந்த அ.தி.மு.க. அரசு ரூ.5½ லட்சம் கோடி கடனை வைத்து விட்டு சென்றார்கள். அதற்கு ஓராண்டிற்கு வட்டி எவ்வளவு என கணக்கீட வேண்டும். 36,000 முதல் 40,000 கோடி தோராயமாக வரும். புள்ளிவிபரம் என்னிடம் இல்லை.
மாநில அரசு நிர்வாகத்தில் மூலதனங்களை உருவாக்குவதற்கும், விவசாயிகளுக்கு நன்மை செய்வதற்கும், ஏழை எளிய மக்களுக்கு சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றுவது அவசியம். முதியோர் ஓய்வூதியம் திண்டுக்கல்லில் மட்டும் கடந்த வாரம் 10 ஆயிரம் நபர்களுக்கு கொடுத்துள்ளோம்.
தி.மு.க. ஆட்சி காலத்தில் திண்டுக்கல் முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கும், தொகுதிக்கு 20 ஆயிரம் பேருக்கும் முதியோர் உதவித்தொகை கொடுத்து இருந்தோம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அனைத்தையும் நிறுத்திவிட்டார். 9 லட்சம் பேரின் முதியோர் உதவித் தொகையை நிறுத்திய பெருமை அ.தி.மு.க.வை சேரும். தற்போது தான் அதனை சரி செய்து 1 லட்சத்து 10 ஆயிரம் நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை கொடுத்து வருகிறோம்." என தெரிவித்தார்.