தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் திருமாவளவன் கலந்துகொண்டது ஏன்? - வன்னியரசு விளக்கம்

Published On 2025-07-28 11:27 IST   |   Update On 2025-07-28 11:27:00 IST
  • எந்த மேடையில் நின்றாலும் சிறுத்தை சிறுத்தையாகவே களமாடுவோம்.
  • 2026 ல் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாத அளவுக்கு அதிமுக- பாஜக கூட்டணியை மக்கள் தோற்கடிப்பார்கள் என்பது உறுதி.

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்டம் சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது பிறந்த நாள் விழாவில் இந்திய ஒன்றிய தலைமை அமைச்சர் என்ற முறையில் நரேந்திர மோடி பங்கேற்றார். பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எமது விடுதலைச்சிறுத்தைகள் பேரியக்கத்தின் தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றார். இதில் எந்த அரசியலும் இல்லை.

தொகுதியில் நடக்கும் அரசு விழாக்களில் பங்கேற்பது மரபாகவும் நாகரீக அரசியலாகவுமே விடுதலைச்சிறுத்தைகள் பார்க்கிறோம். ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி "பிரதமர் மேடையில் திருமாவளவன் பங்கேற்றது அற்புதமான திருப்புமுனை" என்று சொல்லியிருக்கிறார்.

இதில் எந்த திருப்புமுனையும் இல்லை. விடுதலைச் சிறுத்தைகள் எப்போதும் சனாதன எதிர்ப்பில் சமரசம் செய்யவே மாட்டோம். சனாதனத்தை நிறுவ முயலும் பாஜகவுடன் அரசியல் ரீதியான எந்த உறவும் வைக்க மாட்டோம் என எமது தலைவர் பிரகடனப்படுத்திய பிறகும் ஒருவித குழப்பம் மற்றும் நம்பிக்கையற்ற சூழலிலே அதிமுக இருப்பதை ராஜேந்திர பாலாஜி உணர்த்துகிறார்.

எந்த மேடையில் நின்றாலும் சிறுத்தை சிறுத்தையாகவே களமாடுவோம். 2026 ல் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாத அளவுக்கு அதிமுக- பாஜக கூட்டணியை மக்கள் தோற்கடிப்பார்கள் என்பது உறுதி.

தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்துவரும் அதிமுக- பாஜகவை ஒரு போதும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியுள்ளார். 

Tags:    

Similar News