தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.வை வீழ்த்தும் வேலையை விஜய் செய்ய வேண்டும்- டி.டி.வி.தினகரன்

Published On 2026-02-03 13:35 IST   |   Update On 2026-02-03 13:35:00 IST
  • விஜய்யின் பேச்சை பார்த்து அ.தி.மு.க.வினர் ஏமாற மாட்டார்கள்.
  • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாகவே தி.மு.க. ஆட்சி உள்ளது.

சென்னை:

அண்ணா நினைவிடத்தில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

த.வெ.க. தலைவர் விஜய் அ.தி.மு.க. தலைவர்களான எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் ரோல் மாடல் என்று கூறிக்கொண்டு அ.தி.மு.க.வை ஊழல் கட்சி என்று விமர்சிக்கிறார்.

இது பற்றி அவரது கட்சியில் சேர்ந்து உள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் அவர் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். 1988-ம் ஆண்டு அ.தி.மு.க. பிளவுபட்ட போது 1989-ம் ஆண்டு தேர்தலில் எங்கள் வாக்குகள் ஜெயலலிதா அணிக்கும் ஜானகி அணிக்கும் தான் சென்றது.

இப்போதும் அ.தி.மு.க. வாக்குகள் என்றும் எங்களுக்குதான் கிடைக்கும். விஜய் நினைப்பதை போல அவருக்கு கிடைக்காது. விஜய்யின் பேச்சை பார்த்து அ.தி.மு.க.வினர் ஏமாற மாட்டார்கள். தேர்தலுக்குப் பிறகு எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரை அமைச்சர்களாக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதே நேரத்தில் அதற்காக எந்த அழுத்தமும் கொடுக்கப்போவது இல்லை.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் எனது அருமை அண்ணன்தான். எடப்பாடி பழனிசாமி எப்படி எனக்கு அருமை அண்ணனோ அதே போன்று தான் ஓ.பன்னீர் செல்வமும். செங்கோட்டையன் கூட எனக்கு அருமை அண்ணன் தான்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாகவே தி.மு.க. ஆட்சி உள்ளது. தமிழகம் கஞ்சா சந்தையாக விளங்கி வருகிறது. போதை பொருள் புழக்கம் பட்டி தொட்டி எங்கும் இருக்கிறது. யாருக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

வருகிற தேர்தலில் உறுதியாக தி.மு.க. ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி முடிவுக்கு கொண்டு வரும். தி.மு.க. ஆட்சி மீது மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளார்கள். தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் முடிவு செய்து விட்டார்கள். அதனால் ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என தி.மு.க.வினர் எண்ணுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறதா? இல்லையா? என்பதே தெளிவாக தெரியவில்லை. ஆனால் தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளதை போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.

எங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை எல்லாம் மறந்துவிட்டு தி.மு.க.வை வீழ்த்தவே அனைவரும் ஒன்றிணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் முழு மனதுடன் இணைந்துள்ளோம்.

விஜய் தி.மு.க.வை வீழ்த்தும் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். விஜய் எங்களுக்கு எதிரி அல்ல. எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான்.

தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பது தான் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் எங்களுக்கும் சொல்லி கொடுத்த பாடம். அதை தான் நாங்கள் செயல்படுத்த உள்ளோம்.

இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல. ஜெயலலிதா ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்றார்.

Tags:    

Similar News