பொங்கல் பண்டிகை நாளுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது
- ரெயில்களில் 60 நாட்களுக்கு முன்பாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
- ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
தமிழகத்தின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை, 16-ம் தேதி திருவள்ளுவர் தினம், 17-ம் தேதி உழவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால், சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். பஸ்களில் 90 நாட்களுக்கு முன்பாகவும், ரெயில்களில் 60 நாட்களுக்கு முன்பாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
இதனால், கடைசி நேர நெரிசலில் சிக்கி பயணிப்பதைத் தவிர்க்க முன்கூட்டியே பயணிகள் திட்டமிட்டு முன்பதிவு செய்வது வழக்கம்.
அந்த வகையில், ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
IRCTC, இணையதளம் மற்றும் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாக பயணியர் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.