போர் பதற்றத்தால் துபாயில் தேங்கி கிடக்கும் திருப்பூர் ஆடைகள் - பொருளாதார இழப்பு ஏற்படும் அபாயம்
- போர் காரணமாக நீர்வழிப்போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளது.
- போர் சூழல் பெரும் பொருளாதார இழப்பையும் வேலைவாய்ப்பு இழப்பையும் ஏற்படுத்தும்.
ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி குண்டு வீசி கொல்லப்பட்ட நிலையில் ஈரான்- இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நிலைகள் உள்ள வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் (துபாய்), கத்தார், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் கடல் வழி போக்குவரத்து மற்றும் வான்வழி போக்குவரத்து கடும் சிக்கலை சந்தித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் சரக்குகள் பெரும்பாலும் துபாய் சென்று அங்கிருந்து மீண்டும் செல்லும் வகையில் அனுப்பப்பட்டு வருகிறது.
வான்வழி சரக்கு அனுப்புவது கூடுதல் செலவு என்பதால் அவ்வகை ஏற்றுமதி அரிதாகவே செய்யப்படுகிறது . இத்தகைய சூழலில் கடல்வழிப் பாதையில் மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் பாப்-எல்-மண்டேப் ஆகிய பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சூயஸ் கால்வாய் வழியாக செல்வதற்கு பதிலாக ஆப்பிரிக்காவை சுற்றிச்செல்லும் நீண்ட பாதையை கப்பல்கள் தேர்ந்தெடுக்கின்றன. இதனால் பயண நேரம் 15 முதல் 20 நாட்கள் வரை அதிகரித்துள்ளது.
மார்ச் 2, 2026 நிலவரப்படி மெர்ஸ்க் , எம்.எஸ்.சி., ஹபாக் போன்ற முன்னணி கப்பல் நிறுவனங்கள் இந்த வழியாக செல்லும் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. கப்பல் நிறுவனங்கள் போர்க்கால கூடுதல் கட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளன. இதனால் ஒரு கண்டெய்னருக்கு இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை கூடுதல் செலவாகிறது. இது 20 முதல் 50 சதவீத போக்குவரத்து செலவை ஏற்படுத்தும் . அதே போல் வான் வழி போக்குவரத்தில் ஏர் இந்தியா , இண்டிகோ மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களான எமிரேட்ஸ் , கத்தார் ஏர்வேஸ் போன்றவை வளைகுடா நாடுகளுக்கான விமானங்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளன.
ஈரான், இஸ்ரேல், லெபனான், ஈராக் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் வான்வெளிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா செல்லும் இந்திய விமானங்கள் மாற்றுப் பாதையில் செல்வதால் பயண நேரம் அதிகரித்துள்ளது. மேலும் துபாய் போன்ற முக்கிய விமான நிலையங்கள், துறைமுகத்தில் செயல்பாடுகள் குறைந்திருப்பதால் ஏற்கனவே அங்கு அனுப்பப்பட்ட ஏராளமான சரக்குகளும் தேக்கமடைந்திருக்க வாய்ப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் கே. எம். சுப்பிரமணியன் கூறுகையில், "போர் காரணமாக நீர்வழிப்போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளதால் சரக்கு ஏற்றுமதி கடும் சிக்கலை சந்தித்து உள்ளது . வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் சாதகமான நிலையில் இருந்தாலும் போர் சூழல் பெரும் பொருளாதார இழப்பையும் வேலைவாய்ப்பு இழப்பையும் ஏற்படுத்தும். எனவே போர் இல்லாத உலகம் மட்டுமே வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் துபாய் இந்திய நாட்டு ஏற்றுமதியின் மையமாக செயல்படுவதால் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்படும் சரக்குகள் அங்கே வைத்து பிரித்து பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பக்கூடிய சூழலில் அங்கு ஏற்பட்டுள்ள போர்பதட்டம் காரணமாக ஏராளமான சரக்குகள் தேங்கி இருக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் எவ்வளவு பொருட்கள் தேக்கமடைந்துள்ளது என தெரியவரும். போரின் பாதிப்பு குறித்த தாக்கம் அடுத்த ஓரிரு வாரங்களில் முழுமையாக தெரியும் என்றார்.
இந்த சூழலில் இழப்புகளை சந்திப்பதை தவிர்க்கும் பொருட்டு இந்திய அரசு இது தொடர்பாக அவசர கூட்டங்களை நடத்தி வருகிறது. நிலைமை சீராகும் வரை புதிய ஏற்றுமதி ஒப்பந்தங்களைச் செய்யும் போது எப்.ஓ.பி., (சரக்கு ஏற்றிய பின் பொறுப்பு வாங்குபவருடையது) என்ற அடிப்படையில் ஏற்றுமதி செய்ய ஏற்றுமதியாளர்களுக்கு அறிவுறுத்தப்ப ட்டுள்ளது. போர் காரணமாக பின்னலாடை துறை மட்டுமல்லாது விவசாய பொருட்கள் ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.