தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் பாஜக வலுப்பெற்றால் அ.தி.மு.க. இல்லாமல் போய்விடும்- திருமாவளவன்

Published On 2025-12-27 14:53 IST   |   Update On 2025-12-27 14:53:00 IST
  • தற்போது அ.தி.மு.க.வினர் பா.ஜ.க.வின் கருத்தியல் அடிமையாகி விட்டார்கள்.
  • பிராமண கடப்பாரையைக் கொண்டு பெரியார் இடத்தை தகர்ப்பேன் என்பதை வேடிக்கை பார்க்க முடியாது.

திருச்சி:

பெரம்பலூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: தி.மு.க. கூட்டணியை வீழ்த்துவோம் என பா.ம.க. தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளளாரே?

பதில்: தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி தான் ஒரு கூட்டணியாக உள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணியாக உருவாக முடியாத அளவிற்கு சிதறி கிடக்கிறார்கள். ஒருமித்த கருத்து அவர்களுக்குள் ஏற்படவில்லை. கூட்டணியாக உருவாகாத நிலையில் தி.மு.க. கூட்டணியை வீழ்த்துவோம் என கூறுவது நகைப்புக்குரியது.

கேள்வி: கூட்டணியில் பங்கு, ஆட்சியில் பங்கு. தற்போது உங்கள் நிலைப்பாடு?

பதில்: இதற்கு ஏற்கனவே பலமுறை பதில் தெரிவித்து விட்டேன். ஒரு கட்சி முன்கூட்டியே வெளிப்படையாக சொல்லக்கூடிய ஒரு நிலைப்பாடு அல்ல. உரிய நேரத்தில், முறைப்படி முடிவெடுத்து அதனை நடைமுறைக்கு கொண்டு வருவோம். சில நிலைப்பாடுகளை காலம், நேரத்தை கருத்தில் கொண்டுதான் எடுக்க முடியும்.

கேள்வி: பா.ம.க., தி.மு.க. கூட்டணிக்கு வரும் பட்சத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: யூகத்திற்கு பதில் சொல்ல முடியாது.

கேள்வி: தொடர்ந்து செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றர்களே?

பதில்: செவிலியர்களுக்கான போராட்டம் முடிந்து விட்டது. அதற்கு அமைச்சர் பணி நிரந்தரமும் குறித்தும் தெரிவித்துவிட்டார். தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடர்பாக ஏற்கனவே முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளேன். தொடர்ந்து அதே கோரிக்கை இப்போதும் முன் வைக்கிறேன். அதனை முதலமைச்சர் பரிசிலீக்க வேண்டும். ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆதரவு அளித்துள்ளோம்.

கேள்வி: தி.மு.க.வில் தொடர வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்பது போல தாங்கள் பேசியிருப்பது குறித்து?

பதில்: தி.மு.க.வுக்கு சிலர் பரிந்து பேசுகிறோம் என்றும், முட்டுக் கொடுக்கிறோம் என்றும் விமர்சனங்கள் வெளிப்படையாக வருவதால், நாங்கள் அதற்காக பேசவில்லை. கருத்தியலுக்காக பேசுகிறோம். நாங்கள் உள்வாங்கிக் கொண்ட சமூக நீதி, பெரியார், அம்பேத்கர் மார்க்சிய அரசியல். அதுதான் எங்களுக்கு முதன்மையானது. கூட்டணி என்பது இரண் டாம் பட்சம்தான் என்பதை சொல்வதற்காக அதனை அழுத்திக் கூறினேன்.

கேள்வி: இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவர் மீது தேவாலயத்திலேயே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது?

பதில்: இதற்காகத்தான் பா.ஜ.க. வளரக்கூடாது என்று சொல்கிறோம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இந்துத்துவ அமைப்புகள் கிறிஸ்துவ மக்கள் மீதும், கிறிஸ்துவ பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதுதான் பாசிசம் என்பதற்கு சான்று. இப்படி நடக்கும் என்று பிரதமருக்கு தெரியும். இதை திசை திருப்பவே பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

ஒருபுறம் சனாதான சக்திகள் தாக்குதல் என்ற ஒரு அவலம் நடக்கிறது. மறுபுறம் மதவாத சக்திகளான ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. தமிழ்நாட்டில் காலூன்ற வைக்க அ.தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகள், அமைப்புக்கள் துணை போகிறது. அவர்கள் மத வெறியர்களை காலூன்று வைக்க போகிறார்கள். மற்ற மாநிலங்களில் நடந்த அவலம் தமிழ்நாட்டிலும் நடக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

தமிழ்நாட்டில் பா.ஜ.க. இந்தளவிற்கு ஆட்டம் போட காரணமே, அ.தி.மு.க. தான். அவர்கள் இங்கு வலுப்பெற்றால் அ.தி.மு.க. இல்லாமல் போய்விடும், பெரியார் அரசியலும் காணாமல் போய் விடும். நான் பெரியாரின் பிள்ளை, அம்பேத்கரின் பிள்ளை. சனாதான சக்திகளுக்கு துணை போகும் வகையில் சீமானும், விஜய்யும் செயல்படுகிறார்கள் என்பதை கூறுகிறேன். அவர்கள் அரசியல் போக்கும், செயல்பாடும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.க்கு துணை போவதாக இருக்கிறது என்பதுதான் எதார்த்தமான உண்மை. இதனை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கிறிஸ்தவ மக்களின் மீதான தாக்குதல் பற்றி இதுவரை விஜய் வாய் திறந்து உள்ளாரா? கொள்கை எதிரி என்றால் கொள்கை ரீதியாக விமர்சிக்க வேண்டிய ஒரு தேவை இருக்கிறதா, இல்லையா. அவர்களை கண்டிக்க முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு இடையில் அப்படி ஒரு உறவு இருக்கிறது.

பிராமண கடப்பாரையைக் கொண்டு பெரியார் இடத்தை தகர்ப்பேன் என்பதை வேடிக்கை பார்க்க முடியாது. இது சாதாரண அரசியல் அல்ல, பெரியார் அரசியல் என்பது எளிய மக்களின் அரசியல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல். அதனை தகர்ப் பேன் என்பது எப்படிப்பட் டது.

இதுதான் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் அரசியல். அவர்கள் பிராமணர்களின் கடப்பாரையை எடுத்து செயல்பட போகிறாரார்களா, அல்லது அவர்கள் பிராமணர்களுக்கு கடப்பாரையாக மாறப்போகிறார்களா? என்ற கேள்வி எழுகிறது. அவர்கள் பேசுவது சனாதான அரசியல் என்பது வெளிப்படையாக தெரிகிறது.

இது தி.மு.க. அரசியலுக்கு எதிரான கருத்தல்ல, எல்லோரும் பேசுகிற கருத்திற்கு எதிரானது. தி.மு.க.விற்காக நான் பேச வில்லை, நாங்கள் பேசுகிற அரசியலுக்கு எதிரான கருத்தாகும்.

கேள்வி: தமிழகத்தில் ஏற்கனவே கலைஞர் பா.ஜ.க. உடன் கூட்டணி வைத்தார்?

ப: பா.ஜ.க. உடன் கூட்டணி வைத்திருந்த போது மதவாத அரசியலை பேச கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து தான் கலைஞர் கூட்டணி வைத்தார். பா.ஜ.க. உடன் கூட்டணி வைத்திருந்த போதுதான் ராமர் எந்த கல்லூரியில் என்ஜினீயரிங் படித்தார் என கேட்டார் கலைஞர். கூட்டணி வைத்திருந்த பொழுதும் கருத்தியலில் உறுதியாக இருந்தார். ஆனால் தற்போது அ.தி.மு.க.வினர் பா.ஜ.க.வின் கருத்தியல் அடிமையாகி விட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News