புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம் - தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை!
- காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடத்த அனுமதி
- தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை
புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நாளை மறுநாள் (டிச.9) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். முதலில் புதுச்சேரியில் தவெக ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், புதுச்சேரி அரசு அதற்கு அனுமதி மறுத்தது. ரோடு ஷோக்கு பதில் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளலாம் எனக் கூறியது. இதனையடுத்து பொதுக்கூட்டம் நடத்த தவெக தரப்பில் அனுமதி கோரப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கப்பட்டநிலையில், பொதுக்கூட்ட பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர் தவெகவினர்.
இந்நிலையில் பொதுக்கூட்டத்திற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது புதுச்சேரி அரசு. அதில் முக்கியமாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளளது.
முக்கியக் கட்டுப்பாடுகள் பின்வருமாறு:
- புதுச்சேரியை சேர்ந்த 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி
- அனுமதி பெறுபவர்களுக்கு 'கியூ-ஆர்' கோடுடன் கூடிய பாஸ் வழங்கப்பட வேண்டும்.
- தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்குப் பாஸ் வழங்கக் கூடாது.
- முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகளுக்குப் பாஸ் வழங்கக் கூடாது.
- பொதுமக்களுக்குக் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வேண்டும்.
- பாதுகாப்புக்காக மருத்துவக் குழுவினர், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் முன்னெச்சரிக்கையாகத் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
- தொண்டர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரிந்து நிற்கத் தனித்தனித் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.
- நாற்காலிகள் போட அனுமதி இல்லை. மேடையும் அமைக்கக் கூடாது.
என பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தவெகவினர் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என புதுச்சேரி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.