நடிகருக்கு கூட்டம் கூடுவது ஆச்சரியமானது அல்ல- தமிழிசை சவுந்தரராஜன்
- விஜய்யின் தி.மு.க. எதிர்ப்பு ஆரோக்கியமானது.
- விஜய் ஒன்றிரண்டு நாட்கள் வருவதால்தான் அதிக அளவில் கூடுகிறார்கள்.
சென்னை:
த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் பிரசாரத்தில் திருச்சியில் திரண்ட கூட்டம் பற்றி பா.ஜ.க. முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
திருச்சியில் பெரிய அளவில் கூட்டம் திரண்டு இருப்பது உண்மைதான். நடிகருக்காக கூட்டம் கூடுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல.
ஆனால் இவ்வளவு கூட்டத்தின் பாதுகாப்பு நடவடிக்கையில் கூடுதல் கவனம் தேவை. காவல் துறை 23 கட்டளை 43 கட்டளை என்று பிறப்பித்து விட்டு அரசியல் கட்சி தலைவர்களை போல் இருக்கக்கூடாது.
எவ்வளவு கூட்டம் வரும் என்பதை முன்கூட்டியே அறிந்து எவ்வளவு கூட்டம் வந்தாலும் கூட்டத்தை நெறி முறைப்படுத்த வேண்டும். திரண்டு இருப்பது இளைய தலைமுறை. அவர்கள் மனம் நோகாதபடியும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் கூட்டத்தை காவல் துறையினர் ஒழுங்குப்படுத்த வேண்டும். ஆளும் கட்சிக்கு கொடுக்கும் பாதுகாப்பை மற்ற கட்சிகளுக்கும் கொடுக்க வேண்டும்.
விஜய்யின் தி.மு.க. எதிர்ப்பு ஆரோக்கியமானது. அதை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். நடக்கப் போவது மாநில தேர்தல். ஆட்சி மாற்றம் தேவை. எனவே தி.மு.க. அரசின் தவறுகளை மக்கள் மத்தியில் விஜய் தீவிரமாக பரப்ப வேண்டும். அதுதான் தமிழக மக்களுக்கு செய்யும் தொண்டு.
விஜய் ஒன்றிரண்டு நாட்கள் வருவதால்தான் அதிக அளவில் கூடுகிறார்கள். அதிக நாட்கள் அவர் மக்களை சந்திக்க வேண்டும். திரளும் கூட்டம் ஒட்டு மொத்தமாக ஓட்டாகி விடுமா என்பது தெரியாது. ஆனால் இவ்வாறு திரளும் கூட்டத்தை சமூகத்துக்கு எப்படி பயன்படுத்துவது என்பதில் விஜய் அக்கறை காட்ட வேண்டும்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.