வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெற்று விட்டீர்களா? - வீடு வீடாக ஆய்வு நடத்த வரும் மாநகராட்சி ஊழியர்கள்
- மாநகராட்சியில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் உள்ளது.
- 1 லட்சத்து 47 ஆயிரம் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சி கால்நடை பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரம் தெரு நாய்கள் இருப்பதாக கடந்த 2024-ம் ஆண்டில் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 1 லட்சத்து 47 ஆயிரம் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவற்றில் 16 ஆயிரத்து 611 தெரு நாய்களுக்கு தடுப்பூசியுடன், கருத்தடை சிகிச்சையும் அளிக்கப்பட்டு, கண்காணிக்க மைக்ரோ சிப்பும் பொருத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால், தற்போது வரையில் 74 ஆயிரம் வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே அவற்றின் உரிமையாளர்கள் உரிமம் பெற்றும், ரேபீஸ் தடுப்பூசியும், மைக்ரோ சிப்பும் பொருத்தி உள்ளனர்.
அடுத்த வாரத்தில் வளர்ப்பு நாய்கள் உள்ள வீடுகள் தோறும் சென்று அவற்றுக்கு உரிமம் பெறாதவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது. எனவே, அதற்குள் சம்பந்தப்பட்டோர் உரிமம் பெறவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.