தமிழ்நாடு செய்திகள்

மத்திய மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று திருச்சி வருகிறார்

Published On 2026-02-13 04:57 IST   |   Update On 2026-02-13 04:57:00 IST
  • திருச்சிக்கு வருகை தரும் அமித்ஷா இரவு திருச்சியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் ஓய்வெடுக்கிறார்.
  • பிப்ரவரி 14-ம் தேதி திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் புறப்படுகிறார்.

திருச்சி:

தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. இந்த தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த வியூகம் வகுத்துச் செயல்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகம் மற்றும் காரைக்காலில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று திருச்சி வருகை தர உள்ளார்.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தரும் அமித்ஷா இன்று இரவு திருச்சியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் ஓய்வெடுக்கிறார்.

நாளை (பிப்ரவரி 14-ம் தேதி) திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் புறப்பட்டுச் செல்கிறார். காரைக்கால் வரிச்சிகுடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் தரையிறங்குகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு காரைக்கால் நகராட்சி திடல் சென்றடைகிறார். அங்கு ஏற்பாடு செய்துள்ள பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

பொதுக்கூட்டம் முடிந்தபின் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் வரும் அவர், விமானத்தில் சேலம் புறப்பட்டு செல்கிறார். அங்கு நடைபெறும் பா.ஜ.க. மத்தியக்குழு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

அமித்ஷா வருகையையொட்டி மத்திய மந்திரிகள் பியூஸ் கோயல் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் திருச்சியில் முகாமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News