தமிழ்நாடு செய்திகள்

பி.டி.ஆர் வசம் ஒப்படைக்கப்படும் செந்தில் பாலாஜியின் இலாகா?- விரைவில் தமிழக அமைச்சரவையில் மாற்றம்

Published On 2025-04-25 17:07 IST   |   Update On 2025-04-25 19:25:00 IST
  • செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்த ஓரிரு நாளில் மீண்டும் மின்சாரத் துறையின் அமைச்சராக பதவி ஏற்றார்.
  • செந்தில் பாலாஜி விவகாரத்தால் அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் ஏற்படும் என்ற தகவலும் பரவுகிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், 2011 முதல் 2015-ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, இளநிலை பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், நடத்துனர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு பணம் பெற்றுக் கொண்டு நியமனம் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்ததை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அமலாக்கத் துறை ரெய்டு நடத்தப்பட்டு செந்தில் பாலாஜி மோசடி செய்ததற்காக ஆதாரங்கள் இருப்பதாக கூறி கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.

அமைச்சர் பதவியுடன் சிறைக்கு சென்ற செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்காத நிலையில் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் இருந்தார்.

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகே அவருக்கு ஜாமின் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் வந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ந்தேதி உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்த ஓரிரு நாளில் மீண்டும் மின்சாரத் துறையின் அமைச்சராக பதவி ஏற்றார்.

 இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணையின்போது செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகி இருப்பதால் சாட்சிகள் கலைக்கப்படலாம் என்று வழக்கு தொடர்ந்தவர்கள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

வழக்கு மீதான விசாரணையின்போது அமைச்சர் பதவியா? ஜாமீனா? இரண்டில் ஒன்றை தேர்வு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜி முடிவெடுக்க வரும் திங்கள்கிழமை (ஏப்ரல் 28) வரை கெடு விதித்திருந்தது. 

இதைத்தொடர்ந்து சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனைக்கு பின் செந்தில் பாலாஜி பதவி விலகுவதே நல்லது என முடிவெடுத்துள்ளாராம். ஸ்டாலினை செந்தில் பாலாஜி சந்தித்து பேசியப்பிறகு இதில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜி பதவியை ராஜினாமா செய்த பிறகு, மின்சாரத்துறை யார் வசம் ஒப்படைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஏற்கனவே 5 முறை மாற்றி அமைக்கப்பட்ட நிலையில், அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு, செந்தில் பாலாஜி விவகாரத்தால் அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் ஏற்படும் என்ற தகவலும் பரவுகிறது.

இந்த நிலையில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஏற்கனவே கூடுதல் இலாக்க உள்ள நிலையில், மின்சாரத்துறையும் கூடுதல் முக்கியப் பொறுப்பாக வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, கடந்த 21ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரின்போது கூடலூர் தொகுதியின் அ.தி.மு.கவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான பொன். ஜெயசீலன் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "இந்தக் கூட்டத் தொடரிலேயே என்னுடைய துறையில் இருக்கின்ற சிக்கல்களை கூறியிருக்கிறேன். நிதியும் மிகவும் குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போல எல்லா தொழில்நுட்ப பூங்காக்களும் எங்கள் துறையின் கீழ் செயல்படுவதில்லை." என்றார்.

தன்னுடைய அமைச்சரவைக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாதது குறித்து, சட்டமன்றத்துக்குள்ளேயே விமர்சனத்துடன் பி.டி.ஆர் பேசிய பேச்சு விவாதப் பொருளாகியிருந்தது. 

இதைதொடர்ந்து, ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்," நம்முடைய பழனிவேல் தியாகராஜனைப் பொறுத்தவரை அறிவார்ந்த வலிமையான வாதங்களை வைக்கக்கூடியவர். நான் அவருக்குக் கூற விரும்புவது இந்தச் சொல்லாற்றல் அவருக்குப் பலமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, அவரின் பலவீனமாக ஆகிவிடக்கூடாது. இதை ஏன் சொல்கிறேன் என்று அவருக்கே தெரியும். " என்று பேசி மேடையிலேயே சமாதானம் செய்து வைத்தார்.

இந்த சர்ச்சைக்கு மத்தியில், செந்தில் பாலாஜியின் இலாகாவான மின்சாரத்துறையுடன் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையும் பி.டி.ஆர் வசமே ஒப்படைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், பி.டி.ஆர்-க்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதோடு, அவரது புத்திசாலித்தனத்தை இந்த இரண்டு சர்ச்சை நிறைந்த இலாக்ககளை கையாள்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News