தமிழ்நாடு செய்திகள்

மேயரை தேர்வு செய்ய முடியாவிட்டால் மதுரை மாநகராட்சியை கலையுங்கள்- செல்லூர் ராஜூ

Published On 2025-10-24 12:19 IST   |   Update On 2025-10-24 12:19:00 IST
  • தி.மு.க. 2026-ல் ஆட்சிக்கு வந்தால் நாட்டை காப்பாற்ற முடியாது.
  • அ.தி.மு.க. யாருக்கும் துரோகம் இழைத்தது இல்லை.

மதுரை:

மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மதுரை முனிச்சாலை பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க. 54ம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது:-

31 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில், சாமானியர்களுக்கும் பட்டியல் இனத்தவர்க்கும் பதவி கொடுத்து அழகு பார்த்த கட்சி அ.தி.மு.க.

மகளிருக்கும் சம உரிமை கொடுத்து, திறமைக்கேற்ப பதவிக் கொடுத்து அழகு பார்த்த கட்சி அ.தி.மு.க. ஒரு இயக்கத்திலிருந்து இன்னொரு இயக்கம் பிரிவது சகஜம். ஆனால் தி.மு.க.வில் பிரிந்த அ.தி.மு.க. இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாக இருக்கிறது.

எங்கள் பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என ஸ்டாலின் சொல்கிறார்.

வைகை கரையில் சாலைகள் அமைத்து அ.தி.மு.க. ஆட்சியில் சாதனைப் படைத்தோம். தி.மு.க. ஆட்சியில் கலைஞர் நூலகம், ஏறு தழுவுதல் அரங்கம் இதை தான் சாதனையாக மதுரைக்குச் சொல்கிறார்கள்.

170 கோடியில் கோரிப்பாளையம் சந்திப்பு பாலத்தின் திட்டத்தை வடிவமைத்தது அ.தி.மு.க. அரசு. அதனை விரைவுப்படுத்த முடியாமல், தி.மு.க. ஆட்சியில் பாலப்பணி இன்னும் நிறைவடையவில்லை.

மதுரை மாநகராட்சி அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்கள் ஓராண்டு போராடி, 200 கோடி மாநகராட்சி சொத்து வரி ஊழலை வெளிக்கொண்டு வந்தோம். கல்யாண மண்டபங்களுக்கும் வீடுகளுக்கான சொத்து வரியை விதித்து ஊழல் செய்தது தி.மு.க.

இன்று ஊழல் வழக்கில் மேயர் இந்திராணி ராஜினாமா வரை சென்றுள்ள அவலம் மதுரை மாநகராட்சியில் நடந்து இருக்கிறது. இந்த புகாரில் மேயர் கணவர் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேயர் ராஜினமா செய்து இரண்டு வாரமாகியும் மதுரையில் புது மேயரை நியமிக்க இயலாமல் திணறுகிறது தி.மு.க. 5 மண்டலத் தலைவர்கள் மற்றும் நிலைக் குழுத் தலைவர் ராஜினமா செய்து 2 மாதங்களாகி விட்டது. 69 தி.மு.க. கவுன்சிலர்கள் இருந்தும், தி.மு.க.வால் ஒரு மேயரைத் தேர்ந்து எடுக்க முடியவில்லை.

இரண்டு அமைச்சர்கள் இருந்தும், மதுரைக்கு மேயரைத் தேர்ந்து எடுக்க துப்பு இல்லாத கட்சியாக தி.மு.க.. இருக்கிறது. பேசாமல் மதுரை மாநகராட்சியை கலைத்து விட்டுச் செல்லுங்கள்.

தி.மு.க. 2026-ல் ஆட்சிக்கு வந்தால் நாட்டை காப்பாற்ற முடியாது. நாங்கள் கூட்டணிக்காக அலையவில்லை. அ.தி.மு.க. எந்த காலத்திலும் சூழ்நிலையிலும் யாரையும் கூட்டணிக்கு வம்படியாக அழைத்தது இல்லை.

எங்கள் கொள்கையோடு எங்களுக்கு துணையாக மக்களை காப்பாற்ற யார் வந்தாலும் அவர்களை தூக்கி கொண்டாடுவோம்.

அ.தி.மு.க. யாருக்கும் துரோகம் இழைத்தது இல்லை. நண்பன் என்றால் நண்பன். நண்பனுக்கு உயிரையும் தோளையும் கொடுப்போம்.

ஆனால் அதே தோழன் காதை கடித்தால் தூக்கி காலுக்கு கீழே போட்டு மிதிப்போம். இது தான் அ.தி.மு.க. வரலாறு. இது புரிந்தவர்களுக்கு புரியட்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News