தமிழ்நாடு செய்திகள்

எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு கருத்து: யூடியூபர் ஸ்ரீவித்யா மீது வழக்கு பதிவு செய்ய சைபர் கிரைம் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு

Published On 2025-04-18 13:41 IST   |   Update On 2025-04-18 13:51:00 IST
  • நாளுக்கு நாள் அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்.
  • வருகிற ஜூன் 26-ந்தேதி ஸ்ரீவித்யா நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை 11-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அதிமுகவைச் சேர்ந்த வக்கீல் தமிழ்ச்செல்வன் தாக்கல் செய்துள்ள மனுவில், திராவிட நட்புக் கழகம் என்ற அமைப்பின் துணைத் தலைவராக இருக்கும் ஸ்ரீவித்யா என்ற தோழர் ஸ்ரீவித்யா, தனியார் யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேட்டி அளித்துள்ளார்.

அப்போது முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியுள்ளார். இந்த யூடியூப் சேனலின் முக்கிய நோக்கமே ஆளும் திமுக கட்சித் தலைவர்களை ஆதரிப்பது தான். அதேபோல, எதிர்க்கட்சியான அதிமுக தலைவர்களையும், பிராமணர்களையும், பாரதிய ஜனதா தலைவர்களையும் அவதூறாக பேசுவதை ஸ்ரீவித்யா வழக்கமாகக் கொண்டுள்ளார்.

நாளுக்கு நாள் இது போன்ற அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்புகிறார். அதை லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்க்கின்றனர். இதன் மூலம் அரசியல் தலைவர்களின் மரியாதையை கௌரவத்தை சீர்குலைக்கிறார். எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதால் அதிமுகவில் உள்ள லட்சக்கணக்கான தொண்டர்களின் மனம் புண்பட்டுள்ளது. அதனால் கடந்த பிப்ரவரி 23-ந்தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தேன். ஸ்ரீவித்யாவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது அவதூறு வீடியோவை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறியிருந்தேன். ஆனால் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நான் கொடுத்த புகார் மீது அடிப்படை நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்ரீவித்யா மீது மனுதாரர் கொடுத்த புகார் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் வருகிற ஜூன் 26-ந்தேதி ஸ்ரீவித்யா நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News