அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்- ராமதாஸ்
- நீண்ட காலமாக தகுதிக்கு ஏற்ற உரிமைகள் மறுக்கப்படுவதாக அவர்கள் போராடி வருகின்றனர்.
- ஆசிரியர்கள், ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட பல்கலைக்கழக நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நூற்றாண்டு கால வரலாறு கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பிரச்சினைகளை உடனே தீர்க்க வேண்டியது அவசியம் ஆகும். 7-வது ஊதியக்குழு நிலுவைத் தொகைகளை வழங்குதல், முனைவர் பட்ட ஊக்கத் தொகைகளை வழங்குதல், ஆசிரியர்களுக்கான (சி.ஏ.எஸ்.) பதவி உயர்வுகளை தாமதமின்றி வழங்கல், அயற்பணியிட ஆசிரியர்களை உள்ளெடுப்பு செய்தல் உள்ளிட்ட ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்காக அவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும் அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு, போராடி பெற்ற சட்டப்படியான உரிமைகளும் கூட ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது. இவைகள் அவர்களது உரிமைக்கு எதிரானது.
நீண்ட காலமாக தகுதிக்கு ஏற்ற உரிமைகள் மறுக்கப்படுவதாக அவர்கள் போராடி வருகின்றனர். ஆகவே ஆசிரியர்கள், ஊழியர்களின் மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட பல்கலைக் கழக நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.