தமிழ்நாடு செய்திகள்

#TNAssemblyElection விஜய்க்கு அழைப்பு விடுத்த பா.ஜ.க. நிர்வாகியின் பதவி பறிப்பு- நயினார் நாகேந்திரன் அதிரடி

Published On 2026-03-10 08:29 IST   |   Update On 2026-03-10 08:29:00 IST
  • பா.ஜ.க. வட்டாரத்தில் சலசலத்தை ஏற்படுத்தியது.
  • சட்டமன்ற தேர்தல் மாநில பணிக்குழுவில் அவருக்கு அளிக்கப்பட்ட ஊடகத்துறை பொறுப்பாளர் என்ற பொறுப்பிலிருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் இதுவரை இல்லாத வகையில் வரப்போகும் 2026 தேர்தல் களம் வித்தியாசமாக அமைந்து உள்ளது.

வழக்கமாக தேர்தல் காலங்களில் 3 முதல் 4 முனை போட்டிகள் கூட ஏற்படும். ஆனால் கடைசியில் இருமுனை போட்டியே பலமாக இருக்கும். அந்த வகையில் இறுதியில் தி.மு.க. தலைமையிலான அணியும், அ.தி.மு.க. தலைமையிலான அணியும் மல்லுகட்டும். கடைசியில் இரண்டில் ஏதாவது ஒரு அணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

ஆனால் இந்த முறை நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் அந்த சூழ்நிலைக்கு சவால் விடும் சூழலை உருவாக்கி விட்டு உள்ளது. அதற்கு காரணம் அவருக்கு திரளும் ரசிகர்கள் கூட்டம்தான். இதனால் விஜயை அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் சேர்க்க பல தரப்பிலும் ரகசிய முயற்சிகள் நடந்து வருவதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகின.

இதனிடையே, தமிழக மக்களின் நலன் காக்க, வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைய வேண்டும். அவருக்கான இடத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வழங்கும் என பா.ஜ.க மாநில செய்தித் தொடர்பாளராக இருந்த ஏ.என்.எஸ். பிரசாத் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இது பா.ஜ.க. வட்டாரத்தில் சலசலத்தை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில், கட்சி பொறுப்புகளில் இருந்து ஏ.என்.எஸ். பிரசாத் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் A.N.S. பிரசாத் அவர்கள், இப்பொழுது முதல் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.

மேலும், சட்டமன்ற தேர்தல் மாநில பணிக்குழுவில் அவருக்கு அளிக்கப்பட்ட ஊடகத்துறை பொறுப்பாளர் என்ற பொறுப்பிலிருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News