ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்ப்பது பற்றி பின்னர் பேசலாம்: நயினார் நாகேந்திரன் மழுப்பல் பதில்
- பிரதமர் நரேந்திர மோடி கைவினைப் பொருட்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகள் எதையாவது நிறைவேற்றியுள்ளதா?
சென்னை:
சென்னை தி. நகர் தாமஸ் ரோட்டில் பா.ஜ.க. சார்பில் இன்று சேவை வாரம் கொண்டாடப்பட்டது.
இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், மாவட்ட தலைவர் கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி வருமாறு:-
பா.ஜ.க. சார்பில் சுதந்திர தினத்தை வீடு தோறும் கொண்டாட வேண்டும் என்று அகில இந்திய தலைமை முடிவெடுத்துள்ளது.
இதையொட்டி வீடு வீடாக அதனை கொண்டு செல்ல இருக்கிறோம். அடுத்த மாதம் 2-ந்தேதி வரை வீடு தோறும் கொடி ஏற்ற வேண்டும் என்று எல்லா மக்களிடமும் எடுத்துக்கூற இருக்கிறோம். அனைவரும் தேசபக்தியோடு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்த உள்ளோம்.
பிரதமர் நரேந்திர மோடி கைவினைப் பொருட்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன் அடையாளமாகவே காந்தியின் எண்ணத்திற்கு ஏற்ப கைவினைப் பொருட்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன.
தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை பண்ணியவர் எங்கள் பிரதமர். பா.ஜ.க.வின் ஆதரவு அவர்களுக்கு எப்போதும் உண்டு. எங்களது கட்சியின் துணைத் தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு அளித்திருக்கிறார்கள்.
பெண்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் கொடுப்பார்கள் என்றார்கள். எத்தனை ஆண்டுகள் கழித்து கொடுத்தார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும். தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகள் எதையாவது நிறைவேற்றியுள்ளதா?
திட்டங்களில் ஸ்டாலின் பெயர் இருக்கக்கூடாது என்று நீதிமன்றமே கண்டனம் தெரிவிக்கும் வகையில் தான் இந்த ஆட்சி உள்ளது.தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை. அதனால்தான் பள்ளிகளில் மாணவர்கள் சேர்வது குறைந்துள்ளது. ஆதிதிராவிடர் பள்ளிகளில் 30 ஆயிரம் குழந்தைகள் குறைந்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி திறன் வெகுவாக குறைந்து உள்ளது. கல்வியில் தமிழ்நாடுபின்னோக்கி செல்கிறது என்று ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது. பா.ஜ.க. வாக்கு திருட்டு செய்திருப்பதாக கூறுகிறார்கள்.
ஆனால் தேர்தல் ஆணையம் என்பது ஒரு தனிப்பட்ட செயல்பாடு கொண்டதாகும். தமிழகத்தில் ஒரு நாளைக்கு 4 முதல் 5 படுகொலைகள் நடக்கிறது. சட்டம் ஒழுங்கு சரி இல்லாததே இதற்கு முக்கிய காரணமாகும்.
தமிழகத்தில் இன்று போதை பழக்கம் அதிகரித்து உள்ளது எல்லா இடங்களிலும் கஞ்சா உள்ளது. சிங்கப் பூரில் இருந்து 7 கோடி ரூபாய்க்கு கொண்டு வரப்பட்ட கஞ்சா விமான நிலையத்தில் பிடிபட்டுள்ளது.
சின்ன சின்ன கிராமங்களிலும் கஞ்சா பழக்கம் அதிகரித்துள்ளது. காவல்துறைதான் இதை கட்டுப்படுத்த வேண்டும்.
தமிழக அரசு இப்போது கொண்டு வரும் திட்டங்களை 4 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வந்திருக்க வேண்டியதுதானே. தி.மு.க. தோல்வி பயத்தில் இருக்கிறது. அதனாலேயே புதுப்புது திட்டங்களை அறிவித்து வருகிறார்கள். 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 200 இடங்களிலும் தோற்கும்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
பா.ஜ.க. கூட்டணிக்கு மீண்டும் வருமாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்படுமா? என்று நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் அதுபற்றி பின்னர் பேசலாம் என்று தெரிவித்தார்.