தமிழ்நாடு செய்திகள்

விவாதப் பொருளாக்கிட வேண்டாம்... காமராசர் குறித்த சர்ச்சை பேச்சுக்கு எம்.பி. திருச்சி சிவா விளக்கம்

Published On 2025-07-17 06:39 IST   |   Update On 2025-07-17 06:39:00 IST
  • காமராசர் ஏசி இல்லாமல் தூங்கமாட்டார் என்று எம்பி திருச்சி சிவா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
  • கல்விக்கண் திறந்த காமராசர் இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்.

சென்னை பெரம்பூரில் திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா, காமராஜர் குறித்து பேசியது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

அக்கூட்டத்தில் பேசிய திருச்சி சிவா, "தமிழ்நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு என காமராசர் மாநிலம் முழுக்க கண்டனக் கூட்டங்கள் நடத்தி வருகிறார். காமராசருக்கு ஏசி வசதி இல்லை என்றால் உடலில் அலர்ஜி ஏற்பட்டுவிடும். அதற்காக காமராஜர் தங்கும் அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி செய்யச் சொல்லி முதல்வராக இருந்த கருணாநிதி உத்தரவிட்டார். திமுக அரசை எதிர்த்துதான் காமராசர் பேசுகிறார். ஆனால், காமராசரின் உடல்நலன் கருதி கருணாநிதி ஏசி வசதி ஏற்படுத்தச் சொன்னார். காமராஜர் உயிர் பிரிவதற்கு முன்னர் கருணாநிதியின் கைகளைப் பிடித்துக்கொண்டு நீங்கள்தான் இந்த நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்" என்று தெரிவித்தார். .

காமராசர் ஏசி இல்லாமல் தூங்கமாட்டார் என்று எம்பி திருச்சி சிவா பேசியதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காமராசர் குறித்து தான் பேசியது தொடர்பான விளக்கம் அளித்து எம்பி திருச்சி சிவா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில், "பெருந்தலைவர் காமராசரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் தன்மையில் நான் பேசியதாகக் கருத்து கொண்டு விவாதங்கள் வலுத்துக் கொண்டு வருகின்றன. நான் எதிர்வரிசையில் இருக்கும் தலைவர்களைப் பற்றிப் பேசும்போதுகூட கண்ணியத்தோடு விமர்சிப்பதைப் பலரும் அறிவார்கள். கல்விக்கண் திறந்த காமராசர் என்றும், மதிய உணவுத் திட்டத்தின் மூலமாக ஏழை வீட்டுப் பிள்ளைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் வருவதற்கு இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் என்பதையும் பல மேடைகளில் உருக்கமாகவும், உணர்ச்சிகரமாகவும் நான் பேசுவது வழக்கம்.

"குணாளா! மணாளா! குலக்கொழுந்தே! குடியாத்தம் சென்று வா! வென்று வா!" என்று எழுதிய பேரறிஞர் அண்ணா - காமராசரின் மறைவுக்குப் பின் அவருக்கு அனைத்து மரியாதைகளும் செய்ததோடு, சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு அவர் திருப்பெயரைச் சூட்டிய முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழியொற்றி, அவர் பிறந்தநாளை "கல்வி வளர்ச்சி நாளாக" கடைப்பிடித்து அவரின் புகழுக்கு நாளும் மெருகேற்றும் இன்றைய கழகத் தலைவர் தமிழ்நாட்டு முதலமைச்சர் தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின் தலைமையின்கீழ் பணியாற்றும் நான், மறைந்த தலைவர்களின் புகழுக்கு மாசு படிவதை எந்த வகையிலும் யார் செய்தாலும் ஏற்கும் மனநிலை கொண்டவனல்ல.

நாட்டு விடுதலைப் போரில் பல ஆண்டுகள் சிறையேகி, தியாகத் தழும்பேறி, முதலமைச்சராகவும், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் மக்கள் தொண்டாற்றி, எல்லோர் மனதிலும் தனித்த இடம் பிடித்த பெருந்தலைவர் காமராசர் அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் பெருமதிப்பும் கொண்டவன் நான். அண்ணா, கலைஞர், தளபதி வழியில் - கண்ணியம் காக்கும் கடமை கொண்ட கழகத் தொண்டன்!

இந்த விளக்கத்தினை எல்லோரும் அன்புகூர்ந்து ஏற்று என் உரையில் நான் கூறிய செய்தியினை மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம் என அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்!

Tags:    

Similar News