கரூர் சம்பவம் எதிரொலி: த.வெ.க. நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு
- அந்தந்த மாவட்டங்களில் விஜய் பிரசாரத்திற்கு முறைப்படி அனுமதி கேட்டு நிர்வாகிகள் போலீசாரிடம் விண்ணப்பித்துள்ளனர்.
- விஜய் வருகிற 4-ந்தேதி வேலூர், ராணிப்பேட்டையில் பிரசாரம் செய்ய இருந்தார்.
சென்னை:
2026 தேர்தலை எதிர் கொண்டு தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய தொடங்கியுள்ள விஜய் 3-ம் கட்டமாக கடந்த 27-ந்தேதி கரூரில் பிரசாரம் செய்தார்.
அடுத்தடுத்து மற்ற மாவட்டங்களில் பிரசாரம் செய்ய இருந்தார். இதற்கான முன்னேற்பாடு பணிகளில் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அந்தந்த மாவட்டங்களில் விஜய் பிரசாரத்திற்கு முறைப்படி அனுமதி கேட்டு நிர்வாகிகள் போலீசாரிடம் விண்ணப்பித்துள்ளனர்.
இந்தநிலையில் கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே சோகமயமாக்கியது.
மேலும் த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் மற்றும் நிர்வாகிகள் மீது ஜாமினில் வரமுடியாத வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் முன் ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
மேலும் கரூர் சம்பவம் தொடர்பாக மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவது மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுப்பது பற்றி த.வெ.க. தலைவர் விஜய் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிவில் அடுத்த கட்டமாக நடைபெற இருக்கும் பிரசார திட்டங்களுக்கு தலைமை அலுவலகத்தில் இருந்து உத்தரவு வரும் வரை அனுமதி கேட்டு போலீசாரிடம் மனு கொடுப்பதை தற்காலிகமாக தள்ளி வைக்கும்படி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விஜய் வருகிற 4-ந்தேதி வேலூர், ராணிப்பேட்டையில் பிரசாரம் செய்ய இருந்தார். கரூர் சம்பவத்தை தொடர்ந்து அங்கு சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.