தமிழ்நாடு செய்திகள்

கரூர் சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல்: புஸ்சி ஆனந்த் உள்பட 3 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு

Published On 2025-10-26 08:31 IST   |   Update On 2025-10-26 08:31:00 IST
  • த.வெ.க. வக்கீல்கள் முதல் தகவல் அறிக்கை நகலை பெற்றுக்கொண்டனர்.
  • 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர்:

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டனர். இதனையடுத்து ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான 5 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள கடந்த 17-ந்தேதி கரூருக்கு வருகை தந்தனர்.

அப்போது இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வுக் குழுவினர் 1,316 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அந்த ஆவணங்களை ஆய்வு செய்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. தரப்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த முதல் தகவல் அறிக்கை கரூர் கோர்ட்டில் கடந்த 22-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில், கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன், மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல்குமார் மற்றும் த.வெ.க.வை சேர்ந்த சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து கரூர் கோர்ட்டில், சி.பி.ஐ. தரப்பில் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின் நகல் கேட்டு த.வெ.க. வக்கீல்கள் சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, த.வெ.க.வினருக்கு சி.பி.ஐ. தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை நகலை கொடுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து த.வெ.க. வக்கீல்கள் முதல் தகவல் அறிக்கை நகலை பெற்றுக்கொண்டனர்.

சி.பி.ஐ. பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை குறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, 'கரூர் டவுன் போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் தான் சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வது வழக்கம். அந்த வகையில், கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன், மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல்குமார் மற்றும் த.வெ.க.வை சேர்ந்த சிலர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சி.பி.ஐ. விசாரணை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

Tags:    

Similar News