எரிபொருள் தட்டுப்பாடு: மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்
- மத்திய அரசு மக்களுக்கு தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்
- தமிழ்நாடு அரசு அம்மா உணவகங்களை மேலும் முழுவீச்சில் இயங்கவைத்து, எவ்வித தடையுமின்றி தொடர்ந்து உணவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் போர்ச்சூழல் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு உணவகங்கள், டீக்கடைகள் மூடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் இருக்க, உரிய நடவடிக்கைகளை எடுத்து, தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என மத்திய அரசை கோரியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. மேலும் மாநில அரசும் இதில் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில் கூறியுள்ளதாவது,
"ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருட்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் இருக்க, உரிய நடவடிக்கைகளை எடுத்து, தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
அதேபோல், மக்களிடையே இதை வைத்து தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் வேலைகளை விடுத்து, தமிழ்நாட்டில் உணவகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான எரிவாயு ஏற்பாடுகள் மற்றும் சலுகைகளை பொறுப்புள்ள மாநில அரசாக செய்து தர வேண்டும் எனவும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களை மேலும் முழுவீச்சில் இயங்கவைத்து, எவ்வித தடையுமின்றி தொடர்ந்து உணவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.