திருப்பூரில் பனியன் பேக்கிங் நிறுவனத்தில் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
- 2-வது மாடியில் அயனிங் மற்றும் பேக்கிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.
- இன்று காலை நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது.
திருப்பூர்:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் தனஞ்ஜெயன். திருப்பூர் வளையங்காடு பகுதியில் குடியிருந்து வருகிறார். இவர் லட்சுமி நகர் பகுதியில் உள்ள 2 மாடி கட்டிடத்தின் 2-வது மாடியில் அயனிங் மற்றும் பேக்கிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இதில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு வேலை முடிந்து நிறுவனமானது பூட்டப்பட்டு தொழிலாளர்கள் வீட்டிற்கு சென்றனர். இன்று காலை நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் மளமளவென தீப்பிடித்து எரிந்தது.இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடக்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் நிறுவனத்தில் இருந்த ஏராளமான பின்னலாடைகள், காட்டன் பாக்ஸ்கள், பாலி பேக்குகள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும்.
மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.