தமிழ்நாடு செய்திகள்

DMK | அ.தி.மு.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் ஓ.பி.எஸ். வீட்டில் மீண்டும் ஜெயலலிதா புகைப்படம்

Published On 2026-03-10 13:08 IST   |   Update On 2026-03-10 13:08:00 IST
  • அ.தி.மு.க.வுக்கு ஓ.பன்னீர்செல்வம் துரோகம் செய்து விட்டதாக தொடர்ந்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
  • தி.மு.க.வில் ஓ.பி.எஸ். இணைந்தது அவரது இளைய மகனான ஜெயபிரதீப்புக்கு உடன்பாடு இல்லை.

பெரியகுளம்:

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த மாதம் 27-ந்தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளம் அக்ரஹாரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்த ஜெயலலிதா புகைப்படம் அகற்றப்பட்டது.

மேலும் அவரது வீட்டின் முன்புற கதவில் இருந்த அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலை கட்டிங் எந்திரம் கொண்டு வெட்டி அகற்றப்பட்டது. தொடர்ந்து வீட்டில் முகப்பில் இருந்த அ.தி.மு.க. அடையாளமும் மாற்றப்பட்டது.

இதற்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட தொண்டர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். முதலமைச்சராக்கி அழகுபார்த்த அ.தி.மு.க.வுக்கு ஓ.பன்னீர்செல்வம் துரோகம் செய்து விட்டதாக தொடர்ந்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் ஓ.பி.எஸ். வீட்டில் மீண்டும் ஜெயலலிதா படம் வைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் பரவியது. ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் அவரது வீட்டில் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்துடன் குழுவாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தின் பின்னணியில் ஜெயலலிதா படம் பொருத்தப்பட்டு இருந்தது.

 

கடந்த வாரம் ஓ.பி.எஸ். வீட்டில் இருந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் அனைத்தும் நீக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இந்த படங்கள் வைக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தெரிவிக்கையில், தி.மு.க.வில் ஓ.பி.எஸ். இணைந்தது அவரது இளைய மகனான ஜெயபிரதீப்புக்கு உடன்பாடு இல்லை. தி.மு.க.வில் இணையாமல் வேறு இயக்கத்தில் சேரலாம் என்றும் இல்லையெனில் தனியாகவே இருக்கலாம் என்றும் அவர் கூறி வந்துள்ளார். ஆனால் அவரது எதிர்ப்பையும் மீறி தி.மு.க.வில் சேர்ந்து பின்னர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, இரட்டை இலை சின்னம் போன்றவை அகற்றப்பட்டதால் விரக்தியில் ஜெயபிரதீப் பேசாமல் இருந்துள்ளார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியாகவே ஜெயலலிதா படத்தை மீண்டும் வீட்டில் வைத்திருக்கலாம் என்று தெரிவித்தனர். 

Tags:    

Similar News