தியாகதுருகத்தில் மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலி- வாட்டர் சர்வீஸ் உரிமையாளர் மீது வழக்கு
- மின் மோட்டாரை நிறுத்திய போது அவரை மின்சாரம் தாக்கியதில் துடிதுடித்துள்ளார்.
- மின்சாரம் தாக்கி வாலிபர்கள் 2 பேர் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தியாகதுருகம்:
கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் அரவிந்தன் (27) கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவர் நேற்று இரவு தியாகதுருகம் பல்லகச்சேரி சாலையில் உள்ள தனது கார் உரிமையாளருக்கு சொந்தமான வாட்டர் சர்வீசில் காரை கழுவ சென்றார். அப்போது இவர் மின் மோட்டாரை நிறுத்திய போது அவரை மின்சாரம் தாக்கியதில் துடிதுடித்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாட்டர் சர்வீசில் வேலை பார்த்து வந்த தியாகதுருகம் கரிம்ஷா தக்கா பகுதியைச் சேர்ந்த ரியாஸ் அகமது மகன் ஷாகில் (18) அரவிந்தனை காப்பாற்ற முயன்றார்.
அப்போது அவர் மீதும் மின்சாரம் தாக்கி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அருகில் இருந்தவர்கள் இவர்கள் 2 பேரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அரவிந்தன் மற்றும் ஷாகில் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வாட்டர் சர்வீஸ் உரிமையாளரான அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சையத் கலிபுல்லா மகன் ஷாஜன் (30) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி வாலிபர்கள் 2 பேர் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.