தமிழ்நாடு செய்திகள்

கோவையில் மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை - வேலைக்கார பெண் தலைமறைவு

Published On 2026-03-06 12:24 IST   |   Update On 2026-03-06 12:24:00 IST
  • ராம்குட்டி மற்றும் அவரது சகோதரிகள் அவ்வப்போது இங்கு வந்து தாய் கஸ்தூரியை பார்த்து செல்வார்கள்.
  • வீட்டிற்குள் மூதாட்டி துணியால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தார்.

கோவை:

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள குடியிருப்பை சேர்ந்தவர் கஸ்தூரி(வயது82). இவரது கணவர் குட்டி இறந்து விட்டார்.

கஸ்தூரிக்கு ராம்குட்டி என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகன் ராம்குட்டி டாக்டராக உள்ளார். மேலும் அவர் கோவை பிச்சனூரில் மருத்துவமனையும் நடத்தி வருகிறார். கஸ்தூரியின் மகன், மகள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

இவர்கள் அனைவரும் அருகருகே வசித்து வந்தனர். இந்த வீட்டில் கஸ்தூரி மட்டும் தனியாக வசித்து வந்தார். அவருக்கு உதவியாக நேபாளத்தை சேர்ந்த பெண் ஒருவர் நியமிக்கப்பட்டு இருந்தார்.

ராம்குட்டி மற்றும் அவரது சகோதரிகள் அவ்வப்போது இங்கு வந்து தாய் கஸ்தூரியை பார்த்து செல்வார்கள். மேலும் தினமும் காலையில் தங்களது தாய்க்கு போன் செய்து விசாரிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தனர்.

இன்று காலை டி.வி.எஸ்.நகரில் வசித்து வரும் கஸ்தூரியின் மகள், தனது தாயாருக்கு போன் செய்தார். ஆனால் போன் நீண்ட நேரமாகியும் எடுக்கப்படவில்லை. இதனால் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து தனது தாயார் வீட்டின் அருகே வசிக்க கூடிய ஒரு பெண்ணுக்கு போன் செய்து, தகவலை தெரிவித்து, வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறினார்.

அந்த பெண்ணும், கஸ்தூரியின் வீட்டிற்கு சென்றார். வீட்டின் கதவு திறந்து கிடந்தது. மேலும் வீட்டிற்குள் கஸ்தூரி துணியால் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தார். அருகே சென்று பார்த்தபோது கஸ்தூரி உயிரிழந்த நிலையில் இருந்தார்.

இதனால் அந்த பெண் அதிர்ச்சியானார். உடனடியாக சம்பவம் குறித்து அந்த பெண், கஸ்தூரியின் மகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அவர் தனது தாயின் வீட்டிற்கு வந்தார். மேலும் சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி கமிஷனர் வசந்தராஜ் மற்றும் ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர்.

அப்போது வீட்டிற்குள் மூதாட்டி துணியால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தார். இதையடுத்து அவர் எதற்காக கொல்லப்பட்டார்? நகை ஏதாவது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கஸ்தூரி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி, காதில் அணிந்திருந்த கம்மல் உள்ளிட்டவை அப்படியே இருந்தது. 2 பவுன் செயின் மட்டும் மாயமாகி இருந்தது. இதனால் நகைக்காக தான் இந்த கொலை நடந்திருப்பது உறுதியானது.

இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மோப்பநாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிய மோப்பநாய் பின்னர் நின்று விட்டது.

இதையடுத்து போலீசார் உயிரிழந்த கஸ்தூரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு அதில் யாராவது சந்தேகத்திற்கிடாக வந்து சென்றுள்ளனரா? என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் கொலை நடந்த வீடு உள்ள பகுதியில் ஏராளமான வீடுகளும் உள்ளன. இந்த குடியிருப்பின் நுழைவு வாயிலில் காவலாளிகளும் பணியில் உள்ளனர். எனவே வெளியில் இருந்து வந்து ஆட்கள் கொலையை செய்து நகையை கொள்ளை அடிக்க வாய்ப்பு இல்லை என கூறப்பட்டது. மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்த நபர் யாராவது தான் இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த கோணத்தில் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், கஸ்தூரியை பார்த்து கொள்வதற்காக நியமிக்கப்பட்ட நேபாள பெண் இன்று காலை முதல் வேலைக்கு வரவில்லை. இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரை பிடித்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அவரை பிடிக்கவும் போலீசார் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோவையில் தனியாக இருந்த டாக்டரின் தாயை கொலை செய்து, நகையை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News