தஞ்சாவூர் பெரிய கோவிலில் இன்று சித்திரை பெருவிழாவிற்கான பந்தல்கால் முகூர்த்தம் நடப்பட்டது
- பெரியநாயகி அம்மன் சன்னதி வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
- பந்தக்காலுக்கு பால், தயிர், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பெரிய கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆஷாட நவராத்திரி விழா, சித்திரை பெருவிழா என பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில் சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் சன்னதி வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பந்தக்காலுக்கு பால், தயிர், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர் ரவி, செயல் அலுவலர் சத்யராஜ் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சித்திரை பெருவிழாவிற்கான, கொடியேற்றம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ம் தேதி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் ஏப்ரல் 27-ந்தேதி நடக்கிறது. 30-ந்தேதி சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.